உக்ரைன் ராணுவம் சண்டையை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன.
இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவிலிருந்து 3 மைல் தொலைவில் ரஷ்ய படைகள் முன்னேறி வருகிறது என உக்ரைன் ராணுவம் தெரிவித்தது. போரை நிறுத்தும் படி பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ஆனால் ஆயுதங்கள் விடுத்து உக்ரைன் சரணடைய வேண்டும் என ரஷ்யா நிபந்தனை விடுத்துள்ளது.
இந்த நிலையில், உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் இதுபற்றி கூறுகையில், “ அடக்குமுறையில் இருந்து உக்ரைனை மீட்பதே எங்களின் நோக்கம். உக்ரைன் ராணுவம் சண்டையை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார்” என்றார்.