- ஏன் பாலஸ்தீனம்- இஸ்ரேல் மோதல் தீவிரமாகியுள்ளது?
பாலஸ்தீனம்-இஸ்ரேல் பிரச்சனை 75 ஆண்டுகளாக நீடிக்கிறது. இரண்டாம் உலகப்போரின் பொழுது ஹிட்லரின் நாசிச சக்திகள் யூதர்களை இன அழிப்பு செய்தது. ஜெர்மனியில் மட்டும் சுமார் 60 லட்சம் யூதர்கள் ஹிட்லர் படையினரால் கொல்லப்பட்டனர். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் மேற்கத்திய நாடுகள் யூத இன மக்களுக்கு ஒரு தேசம் உருவாக்க வேண்டும் என்பதற்காக பாலஸ்தீனம் பகுதியில் ஒரு தேசத்தை உருவாக்கினர். இதுவே இஸ்ரேல்.
- யூதர்களும் முஸ்லீம்களும் நிரந்தர எதிரிகளா?
இல்லை. பாலஸ்தீன மக்கள் அனைவரும் முஸ்லீம்கள் அல்ல. அவர்களில் கணிசமான வர்கள் கிறித்துவர்கள் உள்ளனர். அரேபியாவில் இஸ்லாம் தோன்றிய பின்னரும் கூட, நபிகள் நாயகம் காலத்திலிருந்தே யூதர்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாகவே வாழ்ந்தனர். ஜெருசலேம் நகரை முஸ்லீம்களிடமிருந்து மீட்க அன்றைய போப் ஆண்டவரால் நடத்தப்பட்ட “சிலுவைப் போர்களில்” முஸ்லீம்களும் யூதர்களும் ஓர் அணியாகவும் கிறித்துவர்கள் குறிப்பாக மேற்கத்திய கிறித்துவர்கள் ஓர் அணியாகவும் மோதினர். பல ஆண்டுகள் நடந்த அந்தப் போரில் யூதர்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாகவே போப் படைகளுக்கு எதிராகப் போரிட்டனர்.
- பின்னர் எப்படி முஸ்லீம்களும் யூதர்களும் எதிரிகளாக மாறினர்?
பாலஸ்தீனத்தின் ஒரு கணிசமான பகுதியை ‘இஸ்ரேல்’ என்ற தேசமாக மாற்றிய பின்னர் சிறிது சிறிதாக பாலஸ்தீன நிலத்தை இஸ்ரேல் ஆக்கிரமிக்க முனைந்தது. இதற்கு அமெரிக்கா பக்க பலமாக இருந்தது. சிறியதும் பெரியதுமாக நடந்த பல போர்களில் இஸ்ரேல் வெற்றி பெற்றது. ஒவ்வொரு வெற்றிக்கு பின்னரும் பாலஸ்தீனத்தின் நிலப்பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. இதற்கு இரு காரணங்கள் இருந்தன. ஒன்று அமெரிக்காவின் ஆதரவு. அரேபிய பகுதியில் உள்ள எண்ணெய் வளத்தை கைப்பற்ற இஸ்ரேலை தனது அடியாளாக அமெரிக்கா பயன்படுத்தி கொண்டது. இன்னொரு காரணம் அரேபிய நாடுகளிடையே ஒற்றுமையின்மை என்பதாகும். - தொடரும்