இஸ்ரேல் நாட்டின் தென் பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இஸ்ரேல் போர் பிரகடனம் செய்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில், இன்று காலை பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் வலுவுடன் இருக்கும் ஹமாஸ் என்ற அமைப்பு இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினர், தெற்கு மற்றும் மத்திய பகுதியில் தங்களது தாக்குதலை மேற்கொண்டுள்ளது. சுமார் 5,000 ராக்கெட்டுகள் இஸ்ரேலின் தெற்கு மற்றும் மத்திய பகுதியில் ஏவப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
இதைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் நாட்டினர் ஹமாஸ் அமைப்பினர் மீது போர் பிரகடனம் செய்துள்ளது. இஸ்ரேலிய ராணுவம் காசா பகுதியில் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த போர் தாக்குதலில் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் படுகாயமடைந்துள்ளனர். மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.