world

img

இலங்கை வன்முறை: மகிந்த ராஜபட்சே தப்பி ஓட்டமா?

இலங்கையில் மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக மகிந்த ராஜபட்சே வெளிநாடு தப்பி ஓட முயல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இலங்கையில் தவறான நிர்வாகத்தாலும், ராஜபக்சே குடும்பத்தின் ஊழல் காரணமாகவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜபக்சே சகோதரர்களான பிரதமர் மகிந்த ராஜபக்சே, ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே ஆகியோரை பதவியில் இருந்து விலகும்படி வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல தரப்பிலும் நெருக்கடி முற்றிய நிலையில், ஜனாதிபதி மாளிகையில் சனிக்கிழமை சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், ‘இடைக்கால அரசு அமைவதால் நாட்டின் நெருக்கடி நிலைக்கு தீர்வு காணப்படும் என்றால் தான் பதவி விலக தயார்,’ என்று பிரதமர் மகிந்த ராஜபக்சே கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஏற்கனவே கொழும்பு மற்றும் தெற்கு மாகாணங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், போராட்டத்தின் தீவிரம் காரணமாக இலங்கை முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியும் தனது இளைய சகோதரருமான கோத்தபயவிடம் மகிந்த ராஜபக்சே நேற்று வழங்கினார். 

இந்நிலையில் மகிந்த ராஜபட்சே, அவரது மனைவி, ஒரு மகன் மற்றும் குடும்பத்தினர் ஹெலிகாப்டர் மூலம் இன்று காலை திருகோணமலை கடற்படைத் தளத்தை வந்தடைந்தனர். அங்கிருந்து அவர்கள் வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவர்கள் கடற்படைத் தளபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் கடற்படை தளத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

திருகோணமலை கடற்படை முகாமிற்கு இரண்டு ஹெலிகாப்டர்கள்  இன்று காலை வந்து சென்றதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹெலிகாப்டர்களில் இருந்து ஏராளமான பைகள் இறக்கப்பட்டு சிறிது நேரத்திற்கு பின்னர் அவை அங்கிருந்து சென்றுள்ளன. கொழும்பு போலீஸ்  மைதானத்தில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்று, சிலரை ஏற்றிக்கொண்டு அவசரமாக செல்லும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

இது நாமல் ராஜபக்சவின் உறவினர் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். நாடாளுமன்ற எம்.பி நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி மற்றும் அவரது மகன் கேசரா ஆகியோர் இன்று காலை கொழும்பிலிருந்து திருகோண கடற்படை தளத்திற்கு தப்பிச் சென்றனர் என ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.

இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்சவின் மல்வானை பகுதியில் உள்ள வீட்டை தீ வைத்து எரித்தனர். 

ஏற்கனவே குரு நாகலில் உள்ள மகிந்த ராஜபட்சவின் வீடு மற்றும் அவரது பூர்வீக வீட்டிற்கு தீ வைத்து எரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜபட்ச குடும்பத்தின் ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவுவதால் இலங்கை முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

இந்தியா ஆதரவு கரம்

இந்நிலையில் இலங்கையில் ஜனநாயகம் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்திய முழுமையாக ஆதரவு அளிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.