world

img

ராஜபக்சே குடும்பத்தை காப்பாற்றவே ரணிலுக்கு பிரதமர் பதவி

கொழும்பு, மே 13 - இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிர மசிங்கே வியாழனன்று மாலை பதவியேற்றார்.  கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அரசியல் நிலைத் தன்மைக்கு உதவும் என்ற அடிப்படையில், ரணி லின் இந்த பதவியேற்பை பல்வேறு தரப்பின ரும் வரவேற்றுள்ளனர். அதேநேரம், ராஜபக்சே குடும்பத்தினரை காப்பாற்றவே ரணில் பிரதமர் ஆக்கப்பட்டுள்ள தாக இலங்கையின் எதிர்க்கட்சிகள், பவுத்த, கிறிஸ்தவ மத குருமார்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கே, இலங்கையில் 6-ஆவது முறையாக பிரதமர் ஆகியிருக்கிறார். 1946-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில், 1977-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குள் எம்.பி.யாக அடியெடுத்து வைத்தார். அப்போது முதல் 8  முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு,  தோல்வியையே சந்திக்காத ரணில் விக்கிரமசிங்கே, இந்தக் காலத்தில் பல்வேறு காலகட்டங்களில் 5 முறை பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் கடந்த 2020-ஆவது ஆண்டு 9-வது  முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி யிட்டு அவர் மிகக்குறைந்த வாக்குகளைப் பெற்று படுதோல்வி அடைந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் கூட ஆக முடியவில்லை. இலங்கையில் மாறி மாறி ஆட்சி அமைத்த ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகிய இரண்டுமே 2020 தேர்தலில் பெரும்  தோல்வியை சந்தித்தன. குறிப்பாக, ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. எனினும், நியமன எம்.பி.க்கள் அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கே எம்.பி.யானார். தற்போதைய நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரம சிங்கே-வின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு உள்ள ஒரே எம்.பி. அவர் மட்டும்தான்.  இந்தப் பின்னணியிலேயே, மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒருவரை பிரதமர் ஆக்க லாமா? என்பதுடன், ராஜபக்சே சகோதரர் களை காப்பாற்றவே ரணில் பிரதமர் ஆக்கப் பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இலங்கையில் நடந்த போராட்டம் பிரதம ராக இருந்த மகிந்த ராஜபக்சேவுக்கு எதிரான  போராட்டம் மட்டுமல்ல, தற்போது ஜனாதிபதி யாக இருக்கும் கோத்தபய ராஜபக்சே-வும் பதவியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்பதற்கான போராட்டமும்தான். ஆனால், கோத்தபய ராஜபக்சே ஏதோ நல்லவர்போல, ஒரே ஒரு எம்.பி.யைக் கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்கேவை பிரதமராக்கி தப்பிக்கப் பார்க்கிறார் என்று எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.

முன்பு தேசிய அரசாங்கம் அமைக்கும் ஆலோசனை முன்னெழுந்தபோது, ‘ஐக்கிய மக்கள் சக்தி’ கட்சியின் தலைவரும், இலங்கை யின் பிரதான எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசா பிரதமர் ஆவார் என்று யூகங்கள் வெளியாகின. ஆனால், “தாம் பிரதம ராக பதவியேற்க வேண்டும் எனில் ஜனாதிபதி பதவியில் இருந்து குறுகிய காலத்தில் கோத்தபய ராஜினாமா செய்தாக வேண்டும்” என சஜித் பிரேமதாசா நிபந்தனை விதித்தார். இந்த பின்னணியிலேயே முன்னாள் ஜனாதி பதி மைத்ரிபால சிறிசேனா, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோருடன் ஆலோசனை நடத்திய தற்போதைய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே, ஒரே ஒரு எம்.பி.யை கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்கே-வை பிரதமராக நியமனம் செய்துள்ளார் என கூறும் இலங்கை எதிர்க்கட்சிகள், பதவியேற்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ரணில் விக்கிரமசிங்கே, “தற்போது ஜனாதிபதிக்கு எதிராக நடைபெறும் போராட்டம் தொடர்பாக நடவடிக்கை எதுவும் இருக்காது” என்று கூறியிருப்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர். மேலும், “நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன்” என்று ரணில் கூறுகிறார் எனில், முழுக்க முழுக்க, மகிந்த  ராஜபக்சே கட்சி எம்.பி.க்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை அன்றி வேறென்ன? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி யுள்ளனர்.

இவை அனைத்தையும் குறிப்பிட்டு, ரணில் பிரதமர் ஆனது, இதற்குத்தானா? என்று இலங்கை எதிர்க்கட்சிகள், பவுத்த- கிறிஸ்தவ மதகுருமார்களும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். சில இடங்களில் அவர்கள் ஆர்ப்பாட்டங்களிலும் இறங்கியுள்ளனர். “ரணில் விக்கிரமசிங்கே என்பவர் எப்போதுமே ராஜபக்சே குடும்பத்தை காப்பாற்று பவர். அவர் அவர்களின் பாதுகாப்பிற்காக ஆட்சிக்கு வருகிறார். அதுபோலவே, ராஜபக்சேக்களும் ரணில் விக்கிரமசிங்கேவின் பாதுகாவலர்கள்தான். கடந்த இரண்டரை ஆண்டுகளாக நாங்கள் அதைத்தான் காண்கிறோம்” என்று மக்கள் விடுதலை முன்ன ணியின் தலைவர் அனுராகுமார திஸநாயக்க விமர்சித்துள்ளார்.

இதனிடையே ரணில் விக்கிரமசிங்கேவுக்கு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இலங்கை கான இந்திய தூதரகம் விடுத்துள்ள வாழ்த்துச்  செய்தியில், “இலங்கை பிரதமராக ரணில் விக்கிர மசிங்கே பதவிப்பிரமாணம் செய்துகொண்ட தன் அடிப்படையில், ஜனநாயக நடைமுறை களுக்கு இணங்க அமைக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதை இந்திய தூதரகம் எதிர்பார்க்கிறது. இலங்கை யின் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்தும் நம்பிக்கை கொள்கின்றது. இலங்கை மக்களுக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு தொடரும்” என குறிப்பிட்டுள்ளது.  இலங்கைக்கான அமெரிக்காவின் தூதர்  ஜூலி சங், தமது டுவிட்டர் பக்கத்தில் வெளி யிட்டுள்ள வாழ்த்தில், “ரணில் விக்கிரமசிங்கே வுடன் இணைந்து செயற்படுவதை எதிர்பார்க் கிறோம். அனைவரையும் உள்ளடக்கிய அரசை அமைப்பதுதான் நெருக்கடிக்கு தீர்வு காணும் முதல் படி” என குறிப்பிட்டுள்ளார். இதனிடையே ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இதுதொடர்பாக நாடாளுமன்ற கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய சபாநாயகர் மகிந்த யாபா அபய வர்த்தனா, நம்பிக்கையில்லா தீர்மானத்தை மே 17 அன்று நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றாலும் தற்போதுள்ள அந்நாட்டுச் சட்டப்படி ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.