இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக பொதுமக்களின் எழுச்சி போராட்டம் தொடர்ந்து வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண வேண்டும் என்று கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அந்நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். கோத்தபய ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு மக்களின் போராட்டத்தை ஒடுக்க, அடுத்தடுத்து அவசர நிலைகளை அமல் படுத்திப் பார்த்தது. எனினும் மக்களின் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஒரே குரலில், இலங்கை அரசு நிர்வாகத்தில் தோல்வி அடைந்துள்ள ராஜபக்சே குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று முழங்கி வந்தனர். இதையடுத்து வேறு வழியின்றி மகிந்த ராஜபக்சே பதவி விலகினார்.
இதைத்தொடர்ந்து இலங்கை முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராஜபக்சே குடும்பத்திற்கு சொந்தமான இடங்கள் சூறையாடப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதையடுத்து நடந்த வன்முறையில் 9 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் போராடுபவர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே பதவி விலகினால் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மகிந்த ராஜபக்சே தலைமறைவாக உள்ள நிலையில் அவர் நாட்டை விட்டு தப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மகிந்த ராஜபக்சேவோ அவரது குடும்பத்தினரோ இந்தியாவில் தஞ்சம் அடைய வில்லை என இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அதேசமயம் மகிந்த ராஜ பக்சே வீடுகள் எரிக்கப்பட்ட நிலையில் அவர் கடற்படை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் கமல் குணரத்னே தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் அசாதாரண சூழல் நிலவும் இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்பாது என்ற இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு இலங்கையில் அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மற்றும் பாதுகாப்பு நிலையை கருத்தில்கொண்டு பெட்ரோல், டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.