world

img

இலங்கையில் இரவுநேர ஊரடங்கு - போராட்டங்களைத்  தடுக்க நடவடிக்கை

பொருளாதார நெருக்கடியால் கடுமையான பாதிப்புகளுக்குள்ளான இலங்கை மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் இரவு நேரங்களில் ஊரடங்கு நிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
எப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ளது. மக்களின் போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது. தலைநகர் கொழும்பில் உள்ள ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேயின் சொந்த வீட்டை நூற்றுக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டனர். இரவு நேரமான பிறகும், முற்றுகை தொடர்ந்தது. நேரம் செல்லச் செல்ல எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசி கூட்டத்தைக் காவல்துறை கலைத்தது.
கொந்தளித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கினர். ஒரு சுவற்றை இடித்த அவர்கள், காவல்துறையினர் மீது செங்கற்களை வீசியிருக்கிறார்கள். ஜனாதிபதியின் இல்லத்திற்குச் செல்லும் வழியில் நின்றிருந்த ஒரு பேருந்திற்குத் தீ வைத்து கொளுத்திவிட்டனர். இதனால் தலைநகர் கொழும்பின் பல பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளதாக  காவல்துறையின் மூத்த கண்காணிப்பாளர் அமல் எதிரிமன்னே தெரிவித்துள்ளார்.
எரிபொருட்களை வாங்குவதற்குத் தேவையான அந்நியச் செலாவணி இல்லாததால் அவற்றை இலங்கை அரசால் இறக்குமதி செய்ய முடியவில்லை. 13 மணிநேரம் மின்சார விநியோகம் இல்லாத நிலை உள்ளது. மின்சாரத்தை சேமிப்பதற்காக இலங்கை முழுவதும் தெருவிளக்குகள் அணைத்து வைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் மின்சாரத்தைப் பயன்படுத்துமாறு மக்கள் அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. தேவையற்ற பயன்பாட்டால், மின்சாரமே இல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளது என்று எச்சரித்திருக்கிறார்கள்.
இந்த நெருக்கடியில் இருந்து மீள பல்வேறு நாடுகளுடனும் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதோடு, கடன் வாங்குவது பற்றி சர்வதேச நிதியத்துடன்(ஐ.எம்.எப்) பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஐ.எம்.எப். கடன் வாங்கினால், அதோடு சேர்ந்து வரும் நிபந்தனைகள் படு மோசமாக இருக்கும் என்ற கவலையும் சேர்ந்தே வந்துள்ளது. இருந்தாலும் உடனடித் தீர்வுகளை நோக்கி இலங்கை விரைகிறது. மக்களின் கொந்தளிப்பும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.