world

img

தடைகளை உடைப்போம்; சோசலிச கியூபாவைப் பாதுகாப்போம்! - ஐ.ஆறுமுகநயினார்

போர் எதிர்ப்பு, உலக சமாதானம் ஆகியவற்றிற்கான இயக்கம் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் கோர அனுபவத்திற்கு பின்னர்,  மிகப்பெரிய அளவில் உலகெங்கும் நடந்து  வருகிறது. இந்தியாவிலும் ஏகாதிபத்தி யத்திற்கு எதிராக, போருக்கு எதிராக, அணுவை ஆயுதமயமாக்குவதற்கு எதிராக, ஆக்கிரமிப்பு யுத்தங்களுக்கு எதிராக, கூட்டுச் சேரா இயக்கங்களை வலுப்படுத்துவதற்கான பல்வேறு இயக்கங்கள் தொடர்ந்து நடை பெற்று வந்திருக்கின்றன. குறிப்பாக, கியூபா  மக்களுக்கு ஆதரவான ஒருமைப்பாட்டு இயக்கம் என்பது சமூக மாற்றத்திற்கும், சோசலிச கனவுகளை நனவாக்குவதற்குமான முயற்சியில்  இந்திய பொதுவுடமை இயக்கங் களின் ஒரு மையச் செயல்பாடாக இருந்துள் ளது. அதற்கு மக்களின் பேராதரவும் இருந்து வருகிறது. இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை என்பது கூட்டுச் சேரா இயக்கத்திற்கு ஆதர வாக இருந்ததன் காரணமாக ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோசலிச ஆதரவு கொள்கைகளை  இந்திய அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வந்தது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவு, புதிதாக விடுதலை அடைந்த மூன்றாம் உலக நாடு களுக்கு ஆதரவு, சோசலிச நாடுகளுக்கு ஆதரவு என்பது அதனுடைய கூட்டுச் சேரா  கொள்கையின் முக்கிய அங்கமாக இருந்தது.  1990 களுக்கு பிறகு சோவியத் யூனிய னுக்கும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து சர்வதேச உறவுகள் ஒரு துருவ உலகமாக மாற்றப்பட்டு விட்டதாக ஏகாதிபத்தியம் கொக்கரித்து வந்தது. ஆனால், ஏகாதிபத்தி யத்திற்கு எதிராக பல துருவ உலகப் போக்கு களை பலப்படுத்த மக்கள் சீனமும், சோசலிச  நாடுகளும், லத்தீன் அமெரிக்க நாடுகளும், பல்வேறு ஆசிய ஆப்பிரிக்க நாடுகளும்  (Global South) முன்முயற்சி எடுத்தன.

லாபவெறியால் நெருக்கடி

புதிய நூற்றாண்டு பிறந்த பிறகு நவீன தாராளமய பொருளாதார வளர்ச்சிக் போக்கினால் ஏற்பட்ட ஏகாதிபத்திய லாப வெறி, நாடுகளின் பொருளாதாரத்தை சீரழித்தது  மட்டுமல்லாமல் உலகப் பொருளா தாரத்தையே  2008 ஆம் ஆண்டில் மிகக் கடுமை யான நெருக்கடிக்குள் தள்ளியது. கிட்டத்தட்ட கடந்த 15 ஆண்டுகளாக உலகப் பொருளா தாரம் மீட்சியடையவில்லை. இதன் விளைவாக  சர்வதேச வர்த்தக உறவுகளில் மாற்றம் ஏற்பட்டு வர்த்தகப் போர்களும், சந்தைகளை பிடிப்ப தும், இந்த போட்டியில் நாடுகளை தங்கள்  கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வருவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கலைப் பதும், ஒத்துழைக்காத நாடுகள் மீது போர் தொடுப்பதும் - என்பது ஏகாதிபத்தியத்தாலும் அதனுடைய கைப்பாவையான நேட்டோ உட்பட ஐரோப்பிய யூனியன் நாடுகளாலும் நடத்தப்பட்டு வருகிறது.

ஏகாதிபத்திய சக்திகளின் தாண்டவம்

சமீபத்தில் நடைபெறும் ரஷ்யா-உக்ரைன் போரும், ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் தைவானைச் சுற்றி நடைபெற்று வரும் பதற்ற மும், வளைகுடா நாடுகளில் ஏமன் உட்பட பல  நாடுகளில் ஏகாதிபத்தியத்தின் பிராந்திய போர்களும், மிரட்டல்களும்  தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. லத்தீன் அமெரிக்க நாடு களில் வெனிசுலாவை மிரட்டி நிக்கோலஸ்  மதுரோவை பணியவைக்க முயற்சிக்கிறார் கள்; பிரேசிலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட லூலா ஆட்சிக்கு எதிராக கலவரங்களை தூண்டி விடுகிறார்கள் ; பெருவில் தேர்ந்தெடுக் கப்பட்ட பெட்ரோ காஸ்ட்டில்லோவை கைது செய்து விட்டு அதற்கு எதிராக போராடுகிற பெரு நாட்டு மக்களை மிருகங்களை சுடுவது போல் சுட்டுக் கொலை செய்கிறார்கள்.

நெருக்கடியில் தள்ளப்பட்ட கியூபா

அமெரிக்க ஏகாதிபத்தியம் கியூபாவிற்கு எதிராக தொடர்ந்து பல பத்தாண்டுகளாக விதித்து வரும் பொருளாதார தடையும், தாக்கு தலும், பொய்ப் பிரச்சாரமும் இந்த காலத்தில் தீவிரப்பட்டிருக்கிறது. கியூபா மீது கண்டம் தாண்டிய பொருளாதார தடைகளை விதித்துள் ளனர்; அவர்கள் நாட்டின் சேமிப்புகள் அமெரிக்க வங்கிகளில் இருப்பதை எடுக்க அனுமதிப்பதில்லை; பல நாடுகளில் பணி புரியும் கியூப மக்கள் சொந்த நாட்டிற்கு பணம் அனுப்ப தடை உள்ளது; சர்க்கரை (கரும்பு), புகையிலை உட்பட விவசாயப் பொருட்களின் உற்பத்தியை மட்டுமே நம்பி இருக்கிற கியூபா விற்கு சுற்றுலா வருபவர்கள் மூலம் கணிச மான வருமானம் வந்தது. இவை அனைத்தும்  கடந்த பத்தாண்டுகளாக முடக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்றினால் வந்த தாக்கம் ஒருபக்கம், பொருளாதார தடைகளால் வந்த தாக்கம் மறு பக்கம் என கியூபா மக்கள் பெரிய நெருக்கடி க்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். ஹவானாவிற்கு எந்த நாட்டுத் தனியார் / அரசு விமான சேவையும் விமானங்களை அனுப்புவதில்லை. சரக்கு மற்றும் பயணிகள் கப்பல் சேவை ஹவானா துறைமுகத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. மீறி செல்லக் கூடிய விமானங்களில் பத்து சதவிகிதத்திற்கும் மேல் உதிரி பாகங்கள் அமெரிக்காவில் வாங்கப்பட்டிருந்தால் அந்த விமானச் சேவை முழுவதிற்கும் உலகம் முழுவதும் தடை விதிக்கப்படும். ஹவானா துறைமுகத்திற்கு செல்லக்கூடிய கப்பல்கள் மீண்டும் வேறு எந்த துறைமுகத்திலும் போய் சேர்வதற்கு அனுமதி மறுக்கப்படும். ஹவானாவிற்கு தேவையான நுகர்பொருட்கள் அனைத்தும் உலகெங்கிலும் இருந்து இரண்டு மூன்று நடுவர்களின் கைகள் மாறி நான்காவதாகத் தான் கியூபா அவற்றைப் பெற முடியும்.

241 தடைகள்

உணவு, எரிபொருள், மின்சாரம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் தொடர்ந்து கடுமை யான பிரச்சனைகளை கியூப மக்கள் சந்திக் கிறார்கள். கியூபாவோடு உறவு கொள்ளக் கூடிய நாடுகள், மனிதர்கள், விமானங்கள், கப்பல்கள், வர்த்தகர்கள் அனைவர் மீதும் அமெரிக்கா தடை விதிக்கிறது. ரிபப்ளிக்கன் கட்சியை சேர்ந்த ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பின் புதிதாக 241 தடைகள் விதிக்கப்பட்டன. அவரை தோற்கடித்து ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜோ பைடன் ஆட்சிக்கு வந்த பின்னர் கட்சி வேறாக இருந்தபோதும் கியூபா மீது மட்டும் தொடர்ந்து அதே கொள்கையையும் தாக்குதலையும் அமல்படுத்துகிறார்கள். இவை அனைத்தையும் மீறி கியூபா, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு தலைவனாக, முன்மாதிரியாக தலை நிமிர்ந்து நிற்கிறது. மக்கள் சீனம், ரஷ்யா, துருக்கி, ஈரான் உள்ளிட்ட நாடுகள் அவர்களுக்கு பெரிய அளவிற்கு ஆதரவை வழங்குகிறார்கள்.

உலகைக் காத்த கியூபா

கோவிட் பெருந்தொற்றின் காலத்தில் நெருக்கடிகளுக்கு நடுவில் கியூபா ஐந்து புதிய  தடுப்பூசிகளைக் கண்டுபிடித்து உலகெங்கும் உள்ள மக்களுக்கு அவற்றை வர்த்த ரீதியாக வும், இலவசமாகவும் வழங்கியது. ஆப்பிரிக்கா, ஆசியா உட்பட இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு கூட கியூபா தனது மருத்துவர்களை அனுப்பி வைத்து கோவிட் தொற்றிலிருந்து உலக மக்களை பாதுகாக்க பெரும் சேவையை செய்தது மறக்க முடியாதது. அமெரிக்காவிலிருந்து 30 மைல் தொலைவில் உள்ள சின்னஞ்சிறு தீவான கியூபாவை தனது எதிரியாகவும், தனது நாட்டு முதலாளித்துவ சித்தாந்தத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாகவும் அமெரிக்கா சித்தரித்து அவர்களை முடக்குவதற்கும், பணி யவைப்பதற்கும் செய்யும் முயற்சிகள் இன்று வரை பலனளிக்கவில்லை. உலகத்தில் சமாதானத்தை விரும்பக் கூடிய நாடுகளும், சோசலிசத்தை நிர்மாணிக்கிற விரும்புகிற சக்திகளும் அளிக்கிற சகோதர ஆதரவும், ஒருமைப்பாடும் கியூபாவை இந்த போராட்டத்தில் நெஞ்சுரத்துடன் நிற்க வைத்துள்ளது. பிடல் காஸ்ட்ரோவும், சேகுவேராவும் தலைமை தாங்கி நடத்திய கியூப புரட்சியை போற்றிப் பாதுகாக்க வேண்டிய கடமை உல கெங்கிலும் உள்ள - சுதந்திரம், ஜனநாயகம், சோசலிசத்தை விரும்புகிற அனைவரின் கடமையாக உள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு சென்னையில் மூன்றாவது ஆசிய - பசிபிக் பிராந்திய கியூப ஒருமைப்பாட்டு மாநாடு நடைபெற்றது. அதில்  கலைஞர் கருணாநிதி அவர்கள் உட்பட தமிழகத்தின் தலைசிறந்த தலைவர்கள் கலந்து கொண்டு கியூபாவிற்கு ஆதரவைத் தெரிவித்தனர்.  ஹரிகிஷன்சிங் சுர்ஜித் அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தபோது, 1990களின் இறுதியில் கியூபா பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்ட போது, தமிழகம் முழுவதும் மக்களிடம் கோதுமை, உணவுப் பொருட்கள், மருந்து மற்றும் நிதி உதவிகளை திரட்டி இந்தியாவிலிருந்து கியூபாவிற்கு கப்பலில் அனுப்பி வைத்த ஒருமைப்பாட்டு பாரம்பரியம் மிக்க தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டு. இன்று பெருமையுடன் கியூப ஒருமைப் பாட்டு மாநாட்டை மீண்டும் சென்னையில் நடத்துகிறது கியூபா ஒருமைப்பாட்டுக்குழு. அதில் புரட்சியின் நாயகன் சே குவேராவின் மகள் மருத்துவர் அலெய்டா குவேரா அவர்களும், பேத்தி எஸ்டெஃபானி குவேரா அவர்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த பெருமைமிக்க மாநாடு தமிழகத்திலும்  இந்தியா முழுவதும் கியூபாவிற்கான ஆதரவையும், ஒருமைப்பாட்டையும் தெரிவிக்கிற பணியை சிறப்புடன் செய்யும்.