பெகாசஸ் உளவு மென்பொருளை இந்தியா வாங்கி உள்ளதை நியூயார்க் டைம்ஸ் இதழ் அம்பலப்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 50,000 கைபேசிகளில் பெகாசஸ் உளவு மென்பொருள் ஊடுறுவியுள்ளதாக, அம்னெஸ்டி இன்ட்டெர்னேசனல் அமைப்பும், பார்பிடன்ஸ் ஸ்டோரிஸ் நிறுவனமும் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் 14 உலக நாடுகளின் தலைவர்களின் கைபேசி எண்களும் உள்ளது. மூன்று அதிபர்கள், 10 பிரதமர்கள் மற்றும் ஒரு மன்னர் இந்த பட்டியலில் உள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஈராக் அதிபர் பர்ஹம் சாலி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், தென் ஆப்பரிக்க அதிபர் சிரில் ரமபோசா ஆகியோரின் கைபேசிகள், பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்படுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.
அதேசமயம் பெகாஸ் ஸ்பைவேர் மென்பொருளை, உலக நாடுகளின் அரசுகளுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுவதாகவும், தனி நபர்கள், தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவதில்லை என்றும் இதை உருவாக்கியுள்ள என்.எஸ்.ஓ நிறுவனம் கூறியுள்ளது.
இந்த விவகாரம் இந்தியாவில் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முற்றிலும் பெகாசஸ் விவகாரத்தால் முடங்கியது. ஆனால் நாடாளுமன்றத்தில் இதைபற்றி விவாதிக்க மறுத்த மோடி அரசு குற்றச்சாட்டு உண்மையில்லை என நிராகரித்தது. இதுகுறித்த வழக்கில் அக்டோபரில் மாதம் உச்சநீதிமன்றம் 3 பேர் கொண்ட தனி விசாரணைக் குழுவை அமைத்தது.
இந்நிலையில் நியூயார்க் டைம்ஸ், பெகாசஸை உலக நாடுகள் வாங்கியது குறித்தும், அந்தநாடுகள் அவற்றை எப்படி பயன்படுத்தியது என்பது குறித்து விரிவான புலனாய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான அதிநவீன ஆயுதங்கள் மற்றும் நுண்ணறிவு தொடர்பான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியா கடந்த 2017 ஆம் ஆண்டு பெகாசஸ் மென்பொருளை வாங்கியதாக கூறியுள்ளது.
இதையடுத்து 2019ல் இஸ்ரேலுக்கு ஆதரவாக பாலஸ்தீன மனித உரிமை அமைப்பு ஐ.நா பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில் பார்வையாளராக இணைவதற்கு எதிராக இந்தியா வாக்களித்தது என்பதும் அந்த கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து கேட்க பிடிஐ செய்தி நிறுவனம் இந்திய அரசைத் தொடர்புகொண்டிருக்கிறது. ஆனால், இதுதொடர்பாக உடனடியாக எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
மேலும் அமெரிக்காவின் எப்.பி.ஐ, உள்நாட்டு கண்காணிப்பில் பயன்படுத்துவதற்காக பெகாசஸ் மென்பொருளை வாங்கி சோதனை செய்ததாகவும், ஆனால் அந்த மென்பொருளை பயன்படுத்த வேண்டாம் என கடந்தாண்டு முடிவு எடுத்ததாகவும் அந்த கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.