world

img

ஒழிகிறது கட்டாய ராணுவ சேவை? கொலம்பியாவில் புதிய மசோதா

பொகோடா, அக்.27- கொலம்பியாவில் உள்ள கட்டாய ராணுவ சேவையை முடிவுக்குக் கொண்டு வரும் பணியில் இடதுசாரி அரசு தீவிரமாக உள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் 18 வயது முதல் 28 வயது வரையிலான இளைஞர்களுக்கு கட்டாய ராணுவ சேவை உண்டு. பள்ளிப்படிப்பை நிறைவு செய்யும்போதே பட்டியல் தயாரிக்கும் முறையும் அங்கு உள்ளது. ராணுவம் மற்றும் காவல்துறையில் பணியாற்றுவதற்கு இளைஞர்கள் அனுப்பப்படுகிறார்கள். 12 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையில் இவர்கள் சேவை செய்கிறார்கள்.  ஆயுதந்தாங்கிப் போராடி வந்த குழுக்களுடன் 2016 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வலதுசாரி அரசு தாமதப்படுத்தி வந்தது. இடதுசாரித் தலைவர் குஸ்தவோ பெட்ரோ ஜனாதிபதியாகத் தேர்வானதில் இருந்து அதை நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

அந்த ஒப்பந்தத்தில் இந்த கட்டாய ராணுவ சேவையை நீக்குவதும் ஒன்றாகும். இந்த மசோதா நிறைவேறி சட்டமாவது என்பது அவ்வளவு எளிதானதும் இல்லை. எட்டு விவாதங்கள் நடைபெற வேண்டும்.  தற்போது இரண்டு விவாதங்கள் நிறைவு பெற்றுள்ளன. செனட் அவையில் இந்த முடிவுக்கு ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக நான்கு வாக்குகளும் பதிவாகின. டிசம்பருக்கும் மேலும் நான்கு விவாதங்கள் நடைபெறும். அடுத்தாண்டுதான் விவாதங்கள் நிறைவு பெற்று சட்டம் நிறைவேற்றப்படும்.  மசோதாவை அறிமுகப்படுத்திய செனட் உறுப்பினர் ஹம்பர்ட்டோ டி லா கல்லே, “சட்டமான பிறகும் 2030 ஆம் ஆண்டில்தான் இது நடைமுறைக்கு வரும்” என்று தெரிவித்தார்.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன மேற்குக் கரைப்பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஆறு அப்பாவிகள் கொல்லப்பட்டதைக் கண்டித்து காசாத் திட்டுப்பகுதியில் முழு அடைப்புப் போராட்டம் நடந்தது. மேற்குக் கரைப்பகுதியிலும் முழு அடைப்பு நடத்த பாலஸ்தீனக்குழுக்கள் அறைகூவல் விடுத்துள்ளன.