காசா, மே 26- இஸ்ரேல் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் புதிய குடியிருப்புகளை அமைக்க திட்டமிட்டிருக்கிறார்கள். பாலஸ்தீனத்திற்குச் சொந்தமான மேற்குக் கரைப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியிருக்கிறது. சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கும் நிலங்களில் இருந்து மக்களை வெளியேற்றுவதோடு, அங்கு இஸ்ரேலியர்களைக் குடியேற்றம் செய்வதன் மூலம், மீண்டும் அந்த நிலங்களுக்குப் பாலஸ்தீன மக்கள் திரும்பி விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். அமெரிக்காவின் ஆதரவு இருப்பதால், உலக அளவில் எழும் கண்டனங்களைப் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தொடர்கிறார்கள்.
தற்போது புதிதாக 5 ஆயிரத்து 425 ஏக்கர் நிலங்கள் குறித்த ஒரு அரசாணையை இஸ்ரேல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அரிஹா நகருக்கு அருகில் உள்ள இந்தப் பகுதியில்தான் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்று மக்களால் கருதப்படும் மோசஸின் சமாதி இருக்கிறது. இந்தப் பகுதியில் 4 ஆயிரத்து 500 குடியிருப்புப் பகுதிகளை உருவாக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை பிரான்ஸ், பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, நார்வே, போலந்து, ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் ஆகிய 15 ஐரோப்பிய நாடுகள் கடுமையாகக் கண்டித்தன.
இந்த நாடுகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், “இரு நாடுகள்(என்று சொல்லப்படும்) என்ற தீர்வுக்கு இந்த கூடுதல் குடியிருப்புப் பகுதிகள் தடையாக மாறும். சர்வதேச சட்டங்களை மீறும் நடவடிக்கை என்பது தெளிவாகவே தெரிகிறது. நியாயமான, நீண்ட காலத்திற்கு நிலைக்கும் மற்றும் விரிவான தீர்வுக்குக் குறுக்கே இந்த நடவடிக்கைகள் நிற்கின்றன “ என்று கூறப்பட்டுள்ளது. எதிர்ப்புகள் அதிகரிப்பதால் தனது திட்டத்தை முன்கூட்டியே செயல்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது. 1967 ஆம் ஆண்டில் ஆக்கிரமித்ததில் இருந்து சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் இஸ்ரேலியர்கள், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். வருங்காலத்தில் விடுதலை பெற்ற பாலஸ்தீனம் அமைகையில் மேற்குக் கரைப்பகுதிகள் தங்கள் நாட்டில் இருக்க வேண்டும் என்று பாலஸ்தீன மக்கள் விரும்புகிறார்கள். ஆக்கிரமிப்பு அரசின் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது.