அமெரிக்காவின் தென் மேற்கு மாகாணமான நியூ மெக்சிகோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 18 வயது உயர்நிலைப் பள்ளி மாணவர்தான் குற்றவாளி என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.15 ரக துப்பாக்கியைக் கொண்டு அந்த மாணவர் சுட்டதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். கண்மூடித்தனமாக ஆறு வீடுகள் மற்றும் மூன்று வண்டிகள் மீது அவர் சரமாரியாக சுட்டார் என்று சம்பவத்தைப் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் எண்ணெய் இறக்குமதி செய்வது தொடர்பாக இராக்குடன் லெபனான் உடன்பாட்டை மேற்கொண்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய லெபனானின் எரிபொருள் துறை அமைச்சர் வாலித் ஃபய்யாத், “சர்வதேசச் சந்தையில் உள்ள எண்ணெய் விலையைக் கணக்கில் கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படும். ஏற்கனவே வாங்கும் எண்ணெய் அளவை விட மேலும் 50 விழுக்காடு அதிகமாக இறக்குமதி செய்ய இந்த உடன்பாடு வழி செய்கிறது” என்றார்.
புதிய குடியேற்ற விதிகளை கியூபா அறிவித்திருக்கிறது. வெளிநாடுகளில் வசித்துக் கொண்டிருக்கும் கியூபக் குடிமக்களுடனான தாய்நாட்டுத் தொடர்பை மேம்படுத்தும் வகையில் இவை இருக்கும் என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. கடவுச்சீட்டு செல்லத்தக்கதற்கான கால வரம்பை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கொண்ட இந்த அறிவிப்பு ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.