world

img

வறுமைக் குறைப்புக்கு பச்சைக்கொடி

பிரேசிலியா, டிச.9- பிரேசிலின் ஜனாதிபதியாகப் பதவியேற்கவிருக்கும் லூலா டி சில்வாவின் சமூகத் திட்டங்களுக்கு அவர் முன்மொழிந்த நிதியை ஒதுக்க பிரேசில் நாடாளுமன்றம் ஒப்புதல் தெரிவித்திருக்கிறது. பிரேசிலில் இதுவரை கடுமையான வறுமை நிலவுகிறது. லூலா ஜனாதிபதியாக இருந்தபோது செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தின. லட்சக்கணக்கான மக்களை வறுமையின் பிடியிலிருந்து விடுவித்தது. அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள், குறிப்பாகக் கடந்த ஐந்து ஆண்டுகளில் பொறுப்பில் இருந்த ஜெய்ர் போல்சானரோவின் வலதுசாரிக் கொள்கைகள் லட்சக்கணக்கான மக்களை மீண்டும் வறுமையில் தள்ளிவிட்டன.  பிரேசிலின் 21 கோடியே 30 லட்சம் மக்களில் 6 கோடியே 25 லட்சம் பேர் வறுமையில் உழல்கிறார்கள் என்று அரசின் அதிகாரப்பூர்வப் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத நிலை தற்போது நிலவுகிறது. மேலும் சமூகத் திட்டங்களுக்கு செலவழிக்கும் தொகைக்கு 2 ஆயிரத்து 800 கோடி அமெரிக்க டாலர் என்ற உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த உச்சவரம்பைத் தளர்த்தி, தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து லூலா வலியுறுத்தி வந்தார். விரைவில் அவர் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்க உள்ள நிலையில் சமூகத்திட்டங்களுக்கு அதிக ஒதுக்கீடு செய்வதற்கான மசோதா கொண்டு வரப்பட்டது. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மிகவும் ஏழ்மையில் வாடும் ஏழைகளுக்கு ஜனவரி மாதத்தில் இருந்து மாதாமாதம் மானியமாக 115 அமெரிக்க டாலர் மூலம் ஆதரவு தரும் லூலாவின் திட்டத்திற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தும் மசோதாவின் விவாதத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ரன்டோல்ப் ரோட்ரிகஸ், கடுமையான சேதமடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியமைக்க வேண்டும். தற்போது ஒதுக்கப்படும் கூடுதல் நிதி வறுமையை ஒழிக்க பெரிய அளவில் உதவும் என்று குறிப்பிட்டார். தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் லூலாவின் முன்மொழிவுக்கு முழுமையாக ஆதரவளித்தனர். ஜனாதிபதியாகப் பொறுப்பேற்பதற்கு முன்னதாகவே லூலாவின் முன்மொழிவை விவாதித்து, அதற்கு ஒப்புதல் அளித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வறுமை குறையும்

ஜனவரிக்குப் பிறகு லூலா எடுக்கப்போகும் நடவடிக்கைகளால் நிச்சயமாக வறுமை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் லூலாவுக்கு எதிராக இருப்பவர்கள்தான் அதிகமாக உள்ளனர். இருப்பினும், அவரது முன்மொழிவில் குறிப்பிட்ட அளவு வெட்டி விட வேண்டும் என்ற அவர்களது முயற்சி வெற்றி பெறவில்லை. முன்மொழிவை முன்வைத்தபோதே நாடாளுமன்றக்குழுவில் 17 விழுக்காடு வெட்டு விழுந்தது. ஆனால், நாடாளுமன்றத்தில் மேலும் குறைக்கும் முயற்சி வெற்றி பெறவில்லை. லூலாவின் வறுமையொழிப்பு நடவடிக்கைகள் மற்ற தென் அமெரிக்க நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. பிற இடதுசாரி ஜனாதிபதிகளுடன் இணைந்து செயல்படுவதற்கான திட்டங்களையும் அவர் தயாரித்துள்ளார். நான்கு ஆண்டுகளில் பெரும் அளவில் சமூக நலத் திட்டங்கள் நிறைவேறுவதோடு, அண்டை நாடுகளுடன் பரஸ்பர முன்னேற்ற நடவடிக்கைகளும் இருக்கப்போகின்றன என்று தொழிலாளர் கட்சி உறுப்பினர்கள் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.