world

ஜெர்மனி தொழிலாளர்களும் போர்க்கொடி

பெர்லின், ஜூலை 20- பணவீக்கம் உயர்ந்து வருவதைச் சுட்டிக்காட்டி தங்களுக்கு  எட்டு  விழுக்காடு ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரி ஜெர்மனியின் தொழிலாளி வர்க்கம் போர்க்கொடி  உயர்த்தியுள்ளது. ஐரோப்பியக் கண்டத்தில் பெரிய பொருளாதாரமாக விளங்கும் ஜெர்மனியின் 36 லட்சம் தொழிலாளர்கள் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர். ஐஜி மெட்டல் என்ற தொழிற்சங்கம் போராட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தத் தொழிற்சங்கத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். செப்டம்பர் மாத மத்தியில் ஊதியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கவுள்ளன.இந்நிலையில் எட்டு  விழுக்காடு ஊதிய உயர்வு தேவை என்று தொழிற்சங்கங் கள் கோரிக்கையை முன்வைத்துள்ளன. நுகர்வோர் விலைக்குறியிட்டு எண் 7.6 விழுக்காடு என்ற அளவில் அதிகரித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளன.  தொழிற்சங்கத் தலைவரான ஜோர்க் ஹாப்மேன், “எகிறும் விலையுயர்வை நிறுவனங்களால் கடந்து போய்விட முடியும். ஆனால் ஊழியர்களால் இயலாது. பெரும்பாலான நிறுவனங்கள் நல்ல நிலையில் உள்ளன. வேலைக்கான ஆர்டர்கள் குவிந்துள்ளன. அதனால் நியாயமான ஊதிய உயர்வை நிறுவனங்களால் வழங்க முடியும்” என்கிறார்.