மாண்ட்ரீல், ஜன.30- தடுப்பூசி தயாரித்தது மற்றும் மக்களுக்குச் செலுத்தியது அறிவியலின் வெற்றியாக இருந்தாலும், சர்வதேச அளவிலான ஒற்றுமையில் தோல்வியைத் தழுவியுள்ளது என்று கனடாவின் மாண்ட்ரீல் நகரில் உள்ள மக்கில் பல்கலைக்கழக ஆய்வாளரான மதுகர் பாய் விமர்சித்துள்ளார். உலகம் முழுவதும் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை ஆயிரம் கோடியைத் தொட்டு விட்டதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த எண்ணிக்கை குறித்துப் பல தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்தாலும், ஆய்வாளகளில் ஒரு கணிசமான பகுதியினர் தடுப்பூசி போடுவதில் நிலவும் ஏற்றத்தாழ்வைக் கடுமையாக விமர்சித்துள்ளார்கள். இதைத்தான், அறிவியலின் வெற்றியாக இருந்தாலும், சர்வதேச ஒற்றுமை தோல்வியடைந்ததையே பாரபட்சம் காட்டுகிறது என்று மதுகர் பாய் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் ஆயிரம் கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்பது வெறும் எண்ணிக்கை இல்லை. அது சாதனைதான் என்பதை வல்லுநர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அதே வேளையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள், “பணக்கார நாடுகளில் 77 விழுக்காடு மக்கள் குறைந்தது ஒரு தவணை தடுப்பூசியாவது போட்டுக் கொண்டுள்ளார்கள். ஆனால், ஏழை நாடுகளில் பத்து விழுக்காடு மக்களுக்குதான் ஒரு தவணை தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது” என்ற புள்ளிவிபரத்தை வெளியிட்டுள்ளனர். நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், “ஓமைக்ரான் பரவி வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்துவதற்காக வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் நான்காவது தவணை ஊசி போடுவது பற்றி ஆலோசனை செய்து வருகின்றன. பூஸ்டர் போடலாம் என்ற கருத்து எழுந்துள்ளது. ஆனால், உலகின் மூன்றில் ஒரு பகுதி மக்கள், அவர்களில் பலர் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள், அதேபோல் ஆசியாவில் உள்ள ஏழை நாடுகளில் உள்ளவர்கள், ஆகியோர் முதல் தவணை தடுப்பூசிக்காகக் காத்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நைஜீரியாவில் போடப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கையை விட அமெரிக்காவில் ஐந்து மடங்கு அதிகமான எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தியிருக்கிறார்கள். ஆயிரம் தடுப்பூசிகள் என்பது உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் குறைந்தது ஒரு தடுப்பூசி போடப்பட்டிருப்பதைக் காட்டியிருக்க வேண்டும் என்கிறார்கள் வல்லுநர்கள்.