world

img

பாலஸ்தீனக் குழுக்கள் கைகோர்த்தன

அல்ஜீர்ஸ், அக்.17- பாலஸ்தீன மக்களுக்காகப் போராடி வரும் அனைத்துக் குழுக்களும் ஒன்றிணைந்து போராடப் போவதாக முடிவெடுத்துள்ளன. சுதந்திர பாலஸ்தீன நாட்டை உருவாக்கு வதற்கான பணியில் பல்வேறு குழுக்கள் செயல்படுகின்றன. யாசர் அராபத் தலைமை யில் பெரும்பாலானவர்கள் அணிவகுத்துப் போராடினர். அவரது மறைவுக்குப் பிறகு பல்வேறு குழுக்களாகப் பிரிந்தனர். இந்தப் பிளவில் ஃபடா கட்சி மற்றும் ஹமாஸ் அமைப்பு கள் போராட்டக் களத்தையே செங்குத்தாகப் பிரித்தன. மேற்குக்கரைப் பகுதியில் ஃபடா கட்சியும், காசாத் திட்டுப்பகுதியில் ஹமாஸ் அமைப்பும் நிர்வாகம் செய்து வருகின்றன. கடந்த 15 ஆண்டுகளாக இந்த இரண்டு அமைப்புகளும் பிரிந்து நின்றன. இந்தப் பிளவால் பாலஸ்தீனப் பிரச்சனைக்கு எந்தப் பலனும் ஏற்படவில்லை என்றும், மாறாக எதிர்விளைவுகள்தான் உருவாகியுள்ளன என்றும் அரசியல் நிபுணர்கள் கருதினர். பல  தரப்புகளும் ஒன்று சேர்ந்து நின்று போராட வேண்டும் என்று அரபு லீக்கும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை அல்ஜீரியா எடுத்தது.

அரபு லீக்கின் அடுத்த உச்சிமாநாடு நவம்பர் 1 ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கு  முன்பாக அனைத்துப் பாலஸ்தீனக் குழுக் களும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு சம்மதிக்க வைப்பது என்ற முயற்சி எடுக்கப் பட்டது. அல்ஜீரியாவின் இந்த முயற்சி பலனளிக்கும் என்று பாலஸ்தீனக் குழுக்களும் நம்பிக்கை வைத்தன. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் நேரடியாக அல்ஜீரியாவின் ஜனாதிபதி அப்தெல்மட்ஜித் டெப்போன் பங்கேற்றார். பேச்சுவார்த்தை நிறைவு பெற்ற பிறகு அல்ஜீரிய அரசு அறிக்கையொன்றை வெளியிட்டது. அதில், “இதுவரையில் இல்லாத அளவுக்கு பொதுக் கருத்தை எட்டியிருக் கிறார்கள். பல்வேறு பாலஸ்தீனக் குழுக் களுக்கு இடையில் ஒற்றுமையை உருவாக்க ஒரு வலுவான அடித்தளமாக இந்த அல்ஜீர்ஸ் அறிவிப்பு இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.  இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற குழுக்களில் ஒன்றான பாலஸ்தீன தேசிய முன்னெடுப்புக் கட்சியின் செயலாளர் முஸ்தபா பர்கோட்டி, “கையெழுத்திடப்பட்டிருக்கும் ஆவணங்களில் பெரும்பாலான அம்சங்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்” என்றார்.

ஓராண்டில் தேர்தல்

தற்போது கையெழுத்திடப்பட்டுள்ள உடன்பாட்டின்படி, உடன்பாடு நடைமுறை க்கு வரும் நாளில் இருந்து ஓராண்டிற்குள் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும். மக்கள் தரும் தேர்தல் முடிவுகளை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைப் பற்றி அல்ஜீர்ஸ் பேச்சுவார்த்தையில் விவாதித்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட அனைத்துக் குழுக்களுமே இந்தப் பேச்சுவார்த்தை மீது மதிப்பு வைத்துள்ளனர். “பாலஸ்தீன மக்களுக்கு இந்த முன்முயற்சி நல்லதைச் செய்யும். இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவுகளோடு நாங்கள் திருப்தியடைகிறோம். வெளிப்படையாகவும், நேர்மறை அணுகுமுறைகளோடும் மற்றும் புரிதலோடும் இது நடந்தது” என்று காசாத்திட்டுப் பகுதியில் நிர்வாகத்தை நடத்தி வரும் ஹமாஸ் அமைப்பின் பொதுச் செயலாளரான ஹனியே தெரிவித்துள்ளார்.