world

img

ஹிட்லர் வீழ்ந்த நாள்... சோவியத்தின் வெற்றித் திருநாள்

இரண்டாம் உலகப்போரின் உச்சக்கட்டமாக, ஹிட்லரின் நாஜிப் படைகளை சோவியத் செஞ்சேனை வீழ்த்திய நாளான மே 9 அன்று ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் ராணுவ அணிவகுப்பு உள்ளிட்ட கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த வெற்றியின் 77ஆம் ஆண்டு தினமான மே 9 (திங்களன்று) செஞ்சதுக்கத்தில் நடைபெற்ற ரஷ்ய ராணுவத்தின் அணிவகுப்பு. இந்த அணிவகுப்பை ஜனாதிபதி புடின் நேரில் பார்வையிட்டார்.

1945 மே 9 சோவியத் ஒன்றியத்தின் வெற்றித் திருநாள். 1945 மே 8 அன்று மாலை ஹிட்லரின் நாஜிப் படைகள் (ஜெர்மனியப் படைகள்) வீழ்ந்தன. ஹிட்லர் தனது தோல்வியை ஒப்புக்கொண்ட நாள். இது அதிகாரப்பூர்வமாக மே 9-ஆம் தேதி அதிகாலை தான் பெர்லினில் அறிவிக்கப்பட்டது.  1945 மே 9-ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியானாலும் 1965 மே 9 அன்று தான்  தொழிலாளர் அல்லாத அனைவருக்குமான விடுமுறை நாளாக சோவியத் யூனியன் அறிவித்தது. செங்கொடியால் தான் உண்மையான சுதந்திரத்தை பெற்றுத் தர முடியும். மனிதகுலத்திற்கு உறுதியான பாதுகாவலன் செங்கொடி தான் என்பதை உலகம் இன்றைக்கு உணர்ந்து வருகிறது என்றால் அது சோவியத்தின் மகத்தான வெற்றித் திருநாள் மூலம்தான் என்றால் அது மிகையல்ல. 

இந்தப் படம் 1945-ஆம் ஆண்டு மே 2- அன்று யெவ்ஜெனி கல்தேய் என்ற புகைப்படக் கலைஞர் எடுத்தது. ஜெர்மனியின் நாடாளுமன்றக் கட்டிடமான ரீச்ஸ்டாக்கின் உச்சியில் செஞ்சேனை வீரர் செங்கொடியை ஏற்றும் இந்தப் புகைப்படம் உலகப்புகழ்பெற்ற ஒன்றாகும். மனிதகுல வரலாற்றின் மிக முக்கியமான காட்சியாகும். 20-ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான புகைப்பட பத்திரிகையாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர், இந்தப்புகைப்படத்தை எடுத்த  யெவ்ஜெனி கல்தேய், ரஷ்யப் புரட்சி நடந்த அதே ஆண்டில் பிறந்தார். (1917 மார்ச் 10) புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்டவராக விளங்கிய கல்தேய். காலமான தமது பாட்டியின் கண் கண்ணாடியிலிருந்த லென்ஸைப் பயன்படுத்தி கச்சா பெட்டி கேமராவை உருவாக்கி, தனது சகோதரிகளின் படங்களை எடுத்து பரிசோதனை செய்தார். பதினைந்து வயதில் அவரது புகைப்படங்கள் உள்ளூர் பத்திரிகையான ‘சோசலிஸ்ட் டான்பாஸில்’ வெளிவரத் தொடங்கின. யெவ்ஜெனி கல்தேய், உள்ளூர் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் எஃகுத் தொழிலாளர்களை திரட்டுவதில் முக்கியப் பங்காற்றியுள்ளார். அவருக்கு பதினெட்டு வயதாகும் போது, அவர் மாஸ்கோவில் உள்ள டாஸ் செய்தி நிறுவனத்தில் புகைப்படக் கலைஞராக வேலையில் சேர்ந்தார்.

இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் நாஜிப் படைகளின் அட்டூழியத்தை வெளி உலகிற்கு கொண்டு வந்ததில் யெவ்ஜெனி கல்தேய் முக்கியப் பங்காற்றினார். அவர் 1997-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி அன்று மாஸ்கோவில் தனது 80-ஆவது வயதில் இறந்தார்.