ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிளென் மெக்ராத் மனைவி ஜேன் மெக்ராத் கடந்த 2008 ஆம் ஆண்டு மார்பக புற்றுநோயால் உயிரிழந்தார். அவரது நினைவாக ஆண்டுதோறும் சிட்னி கிரிக்கெட் பிங்க் டெஸ்ட் விளையாடப்படும். எஸ்சிஜி டெஸ்டின் 3வது நாள் “ஜேன் மெக்ராத்” தினம் என்று அழைக்கப்படுகிறது. இந்த டெஸ்ட் ஆட்டத்தின் மூலம் மெக்ராத் அறக்கட்டளைக்கு நிதி திரட்டப்படும். இந்த நிதியானது புற்றுநோயால் வாடுபவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களுக்கு உதவும் செவிலியர்களுக்கும் பயன்படுத்தப்படும்.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் 4வது டெஸ்ட் ஆட்டம் சிட்னியில் புதன்கிழமை தொடங்குகிறது. இந்த ஆட்டம் பிங்க் டெஸ்ட் ஆட்டமாக நடைபெறுகிறது. இந்த நிலையில் கிளென் மெக்ராத்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெக்ராத் அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி ஹோலி மாஸ்டர்ஸ் கூறுகையில் கிளெனுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அது துரதிர்ஷ்டவசமாக ஒரு நேர்மறையான முடிவைத் தந்தது. கிளென் மற்றும் அவரது குடும்பத்தினர் நலமுடன் இருக்க வாழ்த்துகிறோம். கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் எஸ்சிஜி-ல் உள்ள எங்கள் கூட்டாளர்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அதே போல் இங்கிலாந்து கிரிக்கெட் அணி மற்றும் ஒளிபரப்பாளர்கள் பிங்க் டெஸ்டுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறோம், மேலும் இதை 'பிங்கஸ்ட்' ஆஷஸ் ஆக்குவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கிலாந்து-ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பிங்க் நிற தொப்பிகளை வழங்கும்போது கிளென் மெக்ராத் காணொலி வாயிலாக பங்கேற்கிறார்.