world

img

அழியும் நிலையில் கோலா கரடிகள் - ஆஸ்திரேலியா அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் இருக்கும் கோலா கரடிகள் அழிந்து வரும் உயிரினம் என்று அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கோலா கரடிகளின் எண்ணிக்கை பெரும் அளவில் குறைந்து வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் அவை அழியும் நிலையில் உள்ளன என்று அதிகாரபூர்வமாக ஆஸ்திரேலியா அறிவிப்பு வெளியிடாமல் இருந்தது. 2001 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் இருந்து கோலா கரடிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 85 ஆயிரமாக இருந்தது. அந்த எண்ணிக்கை 20 ஆண்டுகளில், அதாவது 2021 ஆம் ஆண்டில், 92 ஆயிரமாக சரிந்துள்ளது. சரிவைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

ஆஸ்திரேலியாவின் வனப்பகுதியின் அடையாளமாக உலகம் முழுவதும் கோலா கரடிகள் புகழ்பெற்றவையாகும். 2019-20ல் ஏற்பட்ட காட்டுத்தீயால் இந்தக் கரடிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால், அழிவு நிலை என்று அதற்கு முன்பே துவங்கி விட்டது என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். வறட்சி, நோய்கள் மற்றும் நிலங்களை பயன்பாட்டுக்குக் கொண்டு வருதல் உள்ளிட்டவை கரடிகளின் அழிவுக்கு வழிவகுக்கின்றன.

பத்தாண்டுகளுக்கு முன்பாக, பெரும் அளவில் பாதுகாக்கப்பட்ட உயிரினம் என்று அரசால் சொல்லப்பட்ட கோலா கரடிகள், இவ்வளவு விரைவில் அழியும் நிலையில் உள்ள உயிரினப்பட்டியலுக்கு வந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்கிறார் ஆஸ்திரேலியாவின் வனப்பாதுகாப்பு விஞ்ஞானி ஸ்டுவர்ட் பிளான்ச். இவ்வளவு வேகமாக எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டிருப்பது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதையே காட்டுவதாக அவர் குறிப்பிடுகிறார்.

அரசின் இந்த முடிவு வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்று கூறும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள், இந்த முடிவை நடைமுறைப்படுத்தும் வகையில் வலுவான சட்டங்களும் இயற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். இது குறித்து மற்றொரு ஆய்வாளரான அலெக்சியா வெல்பிலவ் என்ற ஆய்வாளர் குறிப்பிடுகையில், "அவசர, அவசரமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையென்றால், 2050 ஆம் ஆண்டுக்குள் கோலா கரடிகள் அழிந்துவிடும் " என்று எச்சரிக்கிறார்.