துனிசியாவில் அகதிகள் படகு மூழ்கி விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர்.
துணை-சஹாரா ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் இரண்டு படகுகளில் இத்தாலியை நோக்கி பயணித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற படகு துனிசிய கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த இரு படகுகளில் 50 க்கும் மேற்பட்ட அகதிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக மத்தியதரைக் கடல் நகராமான ஸ்ஃபாக்ஸில் உள்ள நீதிமன்றத்தின் செய்தித்தொடர்பாளர் மொராத் துர்கி சனிக்கிழமை தகவல் தெரிவித்தார்.
இதில் 6 பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் உட்பட 13 பேரை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் 37 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அச்சம் நிலவி வருகிறது.
அதனைதொடர்ந்து காணாமல் போனவர்களை தேடும் பணிகளில் மீட்புத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
2014 ஆம் ஆண்டு முதல் 18,000 க்கும் மேற்பட்ட அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடக்க முயன்ற போது இறந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு மதிப்பிட்டுள்ளது.