world

img

"மனிதனைத்தான் சுடப்போகிறாய்.."

"நிதானமா இரு... குறியை நன்றாக வைத்துக் கொள். ஒரு மனிதனை நீ சுடப்போகிறாய்.." இப்படித்தான் அவர் சொன்னார்.

"நான் கதவை நோக்கிப் பின்னோக்கிச் சென்றேன். கண்களை மூடிக்கொண்டேன். துப்பாக்கியிலிருந்து குண்டுகளை விடுவித்தேன்"

உயிரோடு விட்டால் ஆபத்து என்று முதலாளித்துவத் தலைமை பீடம் கருதிய சேகுவேராவைச் சுட்டுக் கொன்ற பொலிவிய ராணுவ வீரர் மரியோ டெரான் சலாசர்தான் இதைக் கூறினார். சேகுவாராவை முடித்து விடுங்கள் என்பது அப்போது பொலிவியாவின் ஜனாதிபதியாக இருந்தவரும், கம்யூனிச எதிர்ப்பாளருமான ரெனி பாரியன்டோசின் ஆணையாகும். ஒரு ராணுவ வீரராக அந்த ஆணையை நிறைவேற்றிய சலாசரின் கண்களில் நீர் வழிந்தோடியது.

எதிரிகளின் துப்பாக்கிகள் தன்னைக் குறிவைத்தபோதும் தனது நிதானத்தை சேகுவேரா கைவிடவில்லை. தான் சாகப் போகிறோம் என்பதை விட, எதற்காக சாகப்போகிறோம் என்பதில் அவர் மகிழ்ச்சியே அடைந்திருந்தார். அவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது 39 வயதே நிரம்பியிருந்தது. கியூபாவின் நடத்திக் காட்டிய புரட்சியை காங்கோ மற்றும் பொலிவியா ஆகிய நாடுகளில் நடத்திட வேண்டும் என்று உறுதி பூண்டிருந்தார். 

சுட்டுக் கொன்ற அந்த நிமிடம் பற்றி, "அது என்னுடைய வாழ்க்கையில் மிகவும் மோசமான தருணமாகும். அந்தப் பொழுதில் மிகவும் உயர்ந்தவராக சே தோன்றினார். அவரது கண்களில் ஒளிக்கீற்றுகள்" என்று பாரியன்டோஸ் கூறுகிறார். கொஞ்ச நேரம் தாமதித்திருந்தால் என்னை அவர் பக்கம் இழுத்திருப்பார். என் ஆயுதங்களை நான் கீழே போட்டிருப்பேன் என்று சே குவேராவுடனான கடைசித் தருணங்களை அவர் நினைவு கூர்கிறார். 

சிஐஏவின் உளவாளிகளாகப் பணியாற்றிய இரண்டு கியூப-அமெரிக்கர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு அக்டோபர 8, 1967 அன்று சேகுவேரா பிடிபட்டார்.  பொலிவியாவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான போரில் அந்நாட்டு இளைஞர்களோடு இணைந்து கொரில்லாத் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தார். அவர்களின் குழு கடினமான சூழலை எதிர்கொண்டிருந்தது. பசிக்கொடுமை மற்றும் நோய்களுக்கு மத்தியில் அவர்கள் போரில் ஈடுபட்டிருந்தனர்.

காயமடைந்திருந்த சேகுவேராவை பாழடைந்து போன பள்ளிக்கூடக் கட்டிடத்திற்கு கொண்டு வந்தனர். ஒருநாள் இரவை அவர் அங்கேயே கழிக்கிறார்.  மறுநாள் மரியோ டெரான் சலாசரின் துப்பாக்கியிலிருந்து வெவியேறிய தோட்டாக்கள் சேகுவேராவின் உடலைத் துளைத்திருந்தன. அப்போது (1964-69) பொலிவியாவின் ஜனாதிபதி ரெனி பாரியன்டோஸ் சுட்டுக் கொல்வதற்கான ஆணையைப் பிறப்பித்திருந்தார்.

சுட்டுக் கொன்ற சலாசர் ராணுவப் பணியில் தொடர்ந்தார். ஓய்வு பெற்ற பிறகு ஊடகங்களைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்தார். சில சமயங்களில் சேகுவேராத் தான் சுட்டுக் கொல்லவில்லை என்று மறுக்கவும் செய்தார். 

80 வயது நிரம்பிய நிலையில் மார்ச் 10, 2022 அன்று உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளார். பொலிவியாவின் சான்டா குரூஸ் மாகாணத்தில் அக்டோபர் 9, 1967 அன்று சேகுவேரா சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவரைப் பிடிக்க துணையாக இருந்த மற்றொரு பொலிவிய வீரர் கேரி பிரோடோ, தனது முன்னாள் சகாவான சலாசரின் உயிரிழப்பை உறுதி செய்கிறார். மருத்துவ ரகசியம் காரணமான அவர் எதனால் உயிரிழந்தார் என்பதை மருத்துவமனை வெளியிடவில்லை.