உலகின் மக்கள் தொகை நவம்பர் 15 அன்று 800 கோடியை எட்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது.
ஐ.நா.வின் கணிப்பின்படி நவம்பர் 14-ஆம் தேதிவரை, உலகின் மக்கள் தொகை 799.99 கோடிக்கும் அதிகமாக இருந்தது. இன்று உலகின் மக்கள் தொகை 800 கோடியை எட்டும் என்று கணித்துள்ளது.
2023-ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை மிஞ்சிவிடும் அதன்பின் உலகிலேயே அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா திகழும் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி ஐ.நா மக்கள் தொகை அறிக்கையை வெளியிட்டது. அதில், உலகின் மக்கள் தொகை எண்ணிக்கை 2080களில் 1000 கோடியை கடந்திருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
ஐ.நா.பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் கூறுகையில், இந்த ஆண்டு உலக மக்கள் தொகை தினம் மைல்கல் ஆண்டில் வந்துள்ளது. 2022-ஆம் ஆண்டில் தான் உலக மக்கள் தொகை 800 கோடியை எட்ட உள்ளது. நம்முடைய பன்முகத்தன்மை, பொதுவான மனிதநேயம் , சுகாதாரத்தில் முக்கியத்துவம் ஆகியவற்றை அனைவரும் கொண்டாட வேண்டிய தருணம். சுகாதாரம்,மருத்துவத்துறையில் ஏற்பட்ட முன்னேற்றத்தால் மக்களின் வாழ்நாள் அதிகரித்துள்ளது. மகப்பேறு காலத்தில் ஏற்படும் உயிரிழப்புகள், சிசு மரணங்கள் குறைந்துள்ளன.அதே வேளையில் பூமியை பாதுகாக்க நமக்கு இருக்கும் பொறுப்பையும், ஒருவருக்கொருவர் நமது கடமையை எங்கே இழக்கிறோம் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய தருணம் இது எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 1950-ஆம் ஆண்டுக்குப்பின் உலகின் மக்கள் தொகை குறைவான வேகத்தில் அதிகரித்துள்ளது. அதாவது உலகின் மக்கள் தொகை ஒரு சதவிகிதத்தில் தான் அதிகரித்துள்ளது. 2030-ஆம் ஆண்டில் உலகின் மக்கள் தொகை 830 கோடியாகவும், 2050-ஆம் ஆண்டில் 970 கோடியாகவும் அதிகரிக்கும் என ஐ.நா. கணித்துள்ளது.
உலகின் பல நாடுகளில் கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் குழந்தைப்பேறு தன்மை குறைந்துள்ளது. உலக நாடுகளில் மூன்றில் 2 பங்கு பெண்கள் வாழ்நாளில் 2 குழந்தைக்கும் குறைவாக பெற்றுக்கொள்ளும் நாடுகளில் அல்லது பகுதிகளில் தான் வாழ்கிறார்கள்.
2022 முதல் 2050-ஆம் ஆண்டுகளில் 61 நாடுகளில் மக்கள் தொகை அளவு ஒரு சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமாகக் குறையக்கூடும், அதேநேரம், 8 நாடுகளில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
மக்கள் தொகை அதிகரிக்க வாய்ப்புள்ள நாடுகளில் காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜிரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தான்சான்யா ஆகிய நாடுகளில் மக்கள் தொகை அதிகரிக்கலாம் என ஐ.நா தெரிவித்துள்ளது.