ஜெனிவா, ஜூன் 29- உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளில் மட்டும் வாரா வாரம் ஆயிரம் பேருக்கு மேல் தொற்று ஏற்பட்டு வருகிறது என்று உலக சுகாதாரக் கழகம் தெரி வித்துள்ளது. ஐரோப்பிய கண்டத்துக்கான உலகச் சுகாதாரக்கழக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல சுகாதாரப் பிரச்சனைகளை ஐரோப்பா எதிர்கொண்டு வருகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. வெப்பத்தின் அளவு ஏறி யுள்ளது. பல்வேறு வகையான வைரஸ் தொற்று மீண்டும் பரவிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் தொற்று பரவியிருந்த போது முதல் மூன்று ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் 3 கோடியே 60 லட்சம் மக்களுக்குத் தொற்று ஏற் பட்டது. 30 ஐரோப்பியர்களில் ஒ ருவருக்கு கொரோனா தொற்றியது” என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இன்று வரையில் ஐரோப்பிய நாடுகளில் பரவி வருகிறது. உலக சுகாதாரக் கழகத்தின் புள்ளிவிபரங்களின்படி, வாராவாரம் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு தொற்று ஏற்படுகிறது.
இது குறித்து உலக சுகாதாரக்கழகத்தின் அதிகாரிகளில் ஒருவரான குளுஜ் கூறுகையில், “தொற்றைக் கண்டுபிடிக்கவும், சிகிச்சை அளிக்கவும் பரந்து விரிந்த ஏற்பாடுகளை நாம் செய்யவில்லை என்றால், கொரோனாவில் இருந்து நாம் உண்மையில் விடுபடவே முடியாது” என்று குறிப்பிட்டார். தடுப்பூசிதான் கொரோனாவிற்கு எதிரான போருக்கு முக்கியமானது என்று கூறிய அவர், “நீண்ட நெடிய கொரோனா தொற்றுக் காலத்தைத் தவிர்க்க வேண்டுமானால், முதலில் நாம் கொரோனாவையே தவிர்க்க வேண்டும். எந்தவித அறிகுறிகள் உட லில் தோன்றினாலும் உடனடியாக மருத்துவர்களுடன் ஆலோசித்து, தடுப்பூசி எடுத்துக் கொள்வது அவசியமாகும். பிறருடன் தொடர்பு கொள்வதை முழுமையாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார். பெருந்தொற்றாக மாறுவதைத் தடுக்க, பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ள மக்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று உலகச் சுகாதாரக்கழகம் தெரி வித்திருக்கிறது. இது குறித்து மேலும் கழகத்தின் தரப்பில், “வயதான வர்களின் மீது பெரும் கவனம் செலுத்தப்பட வேண்டும். புதிய வகை வைரஸ் பிரிட்டன், ஸ்பெயின், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் பெரிய அள வில் பரவியுள்ளது. தடுப்பூசியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை யும்தான் நிலைமையைச் சரி செய்வதற்கு பெரும் அளவில் உதவப் போகிறது” என்று பரிந்துரைத்திருக்கிறது.
கடும் வெப்பம்
ஐரோப்பிய நாடுகளில் கடுமை யான வெப்பநிலை நிலவுகிறது. உலக சராசரி வெப்பத்தோடு ஒப்பிடு கையில் தற்போது ஐரோப்பிய நாடுகளில் இரண்டு மடங்கு அதிக அளவு வெப்பம் இருக்கிறது. ஐரோப்பிய யூனியன் மற்றும் உலக வானிலை அமைப்பு ஆகிய இரண்டும் வெப்ப அளவு அதி கரித்துள்ளதை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளன. கொரோனா தொற்றில் இருந்து இன்னும் முழுமையாக விடுபடாத நிலையில், அதிக வெப்பம் கூடுதல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. கடந்த ஆண்டிலும் வெப்பம் தகித்தது. 2022 ஆம் ஆண்டில் ஜூன் முதல் ஆகஸ்டு மாதங்கள் வரை யிலான மூன்று மாதங்களில் 20 ஆயிரம் பேர் ஐரோப்பிய நாடுகளில் உயிரிழந்திருக்கிறார்கள். ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய இரண்டு நாடுகளிலும் வெப்பம் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் ஏற்கனவே 40 டிகிரி செல்சியஸ் வெப்பஅளவு இந்த இரண்டு நாடுகளிலும் காணப்பட்டிருக்கிறது. இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.