குழந்தைகள் இசை ஆல்பம் கேட்டகிரியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஃபல்குனி ஷா என்ற பெண்மனி இசையுலகின் மிக உயரிய விருது பெற்றுள்ளார்.
இசை உலகின் மிக உயரிய விருதாக 'கிராமி விருது' கருதப்படுகிறது. 64வது கிராமி விருதுகள் வழங்கும் விழா நேற்று அமெரிக்காவின் லாஸ் வேகாசின் எம்ஜிஎம் கிராண்ட் கார்டன் அரேனாவில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் இசைத்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் கலைஞர்களுக்கு பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். மேலும் இசை ஆல்பங்களில் சிறப்பாக பங்கேற்ற கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் 86 பிரிவுகளில் இந்தாண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஃபால்குனி ஷா என்ற பெண் 'ஏ கலர்ஃபுல் வேல்ர்ட்' என்ற குழந்தைகள் ஆல்பத்தில் பணியாற்றிய சிறந்த கலைஞர்களின் சார்பாக கிராமி விருதை பெற்றுள்ளார்.
இந்த விருது குறித்து மிகுந்த மகிழ்ச்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இன்று நடந்துள்ள இந்த மேஜிக்கை என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை. 'ஏ கலர்ஃபுல் வேல்ர்ட்' ஆல்பத்தில் பணியாற்றிய சிறந்த கலைஞர்களின் சார்பாக இந்த விருதை எடுத்துச் செல்வதில் பெருமை கொள்கிறேன். இந்த மகத்தான அங்கீகாரத்திற்காக, ரெக்கார்டிங் அகாடமிக்கு நன்றி கூறுகிறோம்" என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கிராமி விருது பெற்ற ஃபால்குனி ஷாவிற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், மேலும் மேலும் சிறப்பாகச் செயல்படுங்கள் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த ஃபால்குனி ஷா, ஆஸ்கர் விருதுகளை வென்ற ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.