world

img

அமெரிக்க கைக்கூலிகளின் அட்டகாசம்

தென் அமெரிக்க கண்டத்தின் மத்தியில் உள்ள நாற்புறமும் நிலப்பரப்புகளால் சூழப்பட்ட நாடு பொலிவியா. லா பாஸ் இதன் தலைநகரம். கடல் மட்டத்திலிருந்து 13313 அடி உயரத்தில் உள்ளது. சாண்டா குரூஸ் பொலிவியாவின் மிகப்பெரிய நகரம்; சுமார் 17 லட்சம் பேர் இங்கு வசிக்கின்றனர். பொலிவியாவின் சோசலிச கட்சித் தலைவர் லூயி ஆர்சே ஆட்சியை சீர்குலைக்கும் வகையில்  சாண்டா குரூஸ் மாநிலத்தின் தீவிர வலதுசாரி எதிர்க்கட்சி, மக்கள் தொகை மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு பணியை முன்னிறுத்தி நெருக்கடி கொடுத்து வருகிறது. அக்டோபர் 20 முதல் சாண்டா குரூஸ் மாநில பழமைவாத எதிர்க்கட்சி, லூயி ஆர்சே ஜனாதிபதிக்கு எதிராக, சோஷலிச அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. 2024-க்கு பதிலாக 2023-லேயே மக்கள் தொகை மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்பதே பழமைவாத எதிர்க்கட்சியின் பிரதான கோரிக்கை. இது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லாத கோரிக்கை. எனினும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருந்தும் எதிர்க்கட்சி தொடர்ந்து புறக்கணிக்கிறது.

தீவிர வலதுசாரி எதிர்க்கட்சித் தலைவரும், சாண்டா குருசின் ஆளுநருமான லூயி பெர்னான்டோ கெமாச்சோ, காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்த அறைகூவல் விடுத்துள்ளார். கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும் என்பதற்கான நிர்ப்பந்தம் இது. அக்டோபர் 22-ல் தொடங்கிய வேலை நிறுத்தம், எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியது. அக்டோபர் 27 முதல், பல்வேறு பகுதி தொழிலாளர்கள் சாலைகளில் பேரணியாக சென்று வேலை நிறுத்தத்திற்கு எதிராக அணி திரண்டனர். ஈவோ மொரேல்ஸின் சோசலிஸ்ட் அரசிற்கு எதிராக 2019 அக்டோபரில் வன்முறை நிறவெறி போராட்டங்களை தூண்டிவிட்ட கெமாச்சோ, தற்போதும் வன்முறையில் இறங்கியுள்ளார். தீவிர வலதுசாரி தீவிரவாத குழுக்களும், கெமாச்சோ ஆதரவாளர்களும் வேலை நிறுத்தத்தை எதிர்ப்பவர்களை தாக்கி வருகின்றனர். 2019 நவம்பர் 10-ல் ஈவோ மொரேல்ஸ் ராஜினாமாவிற்கு பிறகு நடைபெற்ற தேர்தலில், கெமாச்சோ ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டு 14 சதவிகிதம் வாக்கு மட்டுமே பெற்றார். லூயி ஆர்சே வெற்றி பெற்றார். 2021 பிராந்திய தேர்தலில், கெமாச்சோ சாண்டா குருசின் ஆளுநராக தேர்வானார். இடதுசாரி முற்போக்கு அரசு அமைப்பது சவால்கள் நிறைந்தது. அவ்வாறு அமைந்த இடதுசாரி அரசுகளை வலதுசாரிகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதும் சவால்கள் நிறைந்தது.