world

img

வலதுசாரிக் கொள்கைகளுக்கு முடிவு கட்டுவோம்!

குயிட்டோ, மார்ச் 1- ஈக்வடாரின் வலதுசாரி ஜனாதிபதி கில்லர்மோ லஸ்சோ பதவி விலக வேண்டும் என கோரி அந்நாட்டின் மாணவர்கள் பெரும் எழுச்சியுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடாரில் ஜனாதிபதி கில்லர்மோ லஸ்சோ தலைமையிலான அரசு, வலதுசாரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த ஆட்சிக்காலத்தில் வன்முறை வெறியாட்டங்கள் பெரும் அளவில் அதிகரித்துள்ளன. 2021-ஆம் ஆண்டில் மட்டும் கொலைகள் இரட்டிப்பாகிவிட்டன. சாலைகளில் மட்டுமல்லாமல், சிறைகளிலும் கொலைகள் ஏராளமான அளவில் நடந்தன. இரண்டு மாதங்களில் மட்டும் சிறைகளில் 320 பேர் கொல்லப்பட்டனர். சிறைகளுக்குள் நடந்த கொலைச் சம்பவங்களுக்கு அங்கு அடைக்கப்பட்டுள்ள போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அதேவேளையில், வலதுசாரிகளின் ஆட்சியில் போதைப் பொருட்களைக் கடத்துவதும் பெரும் அளவில் அதிகரித்துள்ளது. தங்களின் பாதுகாப்பே பிரதானமான பிரச்சனை என்று மக்கள் கருதுவதாக கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளன. மக்களைப் பாதுகாப்பதில் லஸ்சோ அரசு பெரும் தோல்வியடைந்துள்ளதாக அந்தக் கணிப்புகள் கூறுகின்றன.

அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் பெரும்பாலான இடங்களில் இடதுசாரிகளுக்கே மக்கள் ஆதரவளித்திருக்கிறார்கள். முக்கியமான நகரங்களில் மேயர் பொறுப்புகளுக்கு இடதுசாரி வேட்பாளர்கள் தேர்வாகியுள்ளனர். ஜனாதிபதி லஸ்சோவின் ஆளுங்கட்சி பெருந்தோல்வியைத் தழுவியுள்ளது. இந்நிலையில், தங்களை நெருக்கடிக்குள் தள்ளும் வலதுசாரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தக்கூடாது என்றும், லஸ்சோ தலைமையிலான அரசு வெளியேற வேண்டும் என்றும் கோரி போராட்டங்கள் நடக்கின்றன. பெரும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், போதைப் பொருட்களின் கடத்தல்களையும் தடுக்க முடியாத லஸ்சோ அரசு பதவி விலக வேண்டும் என்று ஈக்வடார் மாணவர்கள் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள். செங்கொடிகளை ஏந்திக்கொண்டு “லஸ்சோவே வெளியேறு’’ என்பது உள்ளிட்ட முழக்கங்களுடன் ஈக்வடார் மத்தியப் பல்கலைக்கழக வாயிலில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ‘‘லஸ்சோ பதவி விலக வேண்டும் அல்லது அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கான பணி தொடங்க வேண்டும்’’ என்று அந்நாட்டின் மாணவர் கூட்டமைப்பு வலியுறுத்தியிருக்கிறது.

வலதுசாரிக் கொள்கைகளுக்கு முடிவு

கல்விக்கான ஒதுக்கீட்டை வெட்டுவதில் வலதுசாரி அரசு முனைப்பாக இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள மாணவர் கூட்டமைப்பு, அடிப்படையான நிதி ஒதுக்கீட்டிற்குக்கூட உத்தரவாதம் தராத அரசாக இருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளது. அதோடு, ஏற்கனவே ஒதுக்குவதாகச் சொல்லப்பட்ட நிதியைக்கூட தராமல் இழுத்தடிக்கிறார்கள். அந்த நிதி இல்லாததால் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு ஊதியம், மாணவர்களுக்குள்ள உதவித்தொகை உள்ளிட்டவை தரப்படவில்லை. ஒதுக்கப்பட்ட தொகையில் ஈக்வடாரின் மத்தியப் பல்கலைக்கழகத்திற்கு 1 கோடி டாலரும், குவாயாகுயில் பல்கலைக்கழகத்திற்கு 50 லட்சம் டாலரும் நிலுவையில் இருக்கிறது. சிறப்புப் பயிற்சிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை வெட்டியிருக்கின்றனர். இத்தகைய வலதுசாரிக் கொள்கைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும், அதன் முதல் கட்டமாக லஸ்சோ தலைமையிலான அரசு வெளியேற வேண்டும் என்றும் மாணவர்கள் கோரி வருகிறார்கள். அதுவரையில் தங்கள் போராட்டம் தொடரும் என்பதில் உறுதியாக உள்ளனர்.