அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தைத் தாக்கிய சூறாவளியால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் தென்பகுதியில் உள்ளது கென்டக்கி மாகாணத்தில் நேற்று பலத்த சூறாவளிக் காற்று வீசியது. இதனால் வீடுகள், தொழிற்சாலைகள் என அனைத்தும் சேதமடைந்தது. இந்நிலையில், இந்த இடிபாடுகளில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படும் நிலையில், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
கென்டக்கி பகுதியில் மெழுகுவர்த்தி தொழிற்சாலை செயல்பட்டு வரும் நிலையில், இந்த தொழிற்சாலை சூறாவளிக் காற்றில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது. இதில் 110 தொழிலாளர்கள் அப்போது வேலை பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. தொழிற்சாலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் 110 பேரில் 40 பேர் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கென்டக்கி மாகாணத்தின் ஆளுநர் ஆண்டி பெஸ்ஹீர் கூறுகையில், கென்டக்கி மாகாணம் இப்படியொரு சூறாவளியை இதுவரை சந்தித்தது இல்லை. இந்த சூறாவளிக் காற்றால் மாகாணம் முழுவதும் நிர்மூலமாகியுள்ளது. மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 100 பேருக்கு மேல் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக நாங்கள் எண்ணுகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், முழு மீட்புப் பணிகள் முடிந்த பிறகே உயிரிழந்தவர்கள் பற்றிய முழுமையான விவரம் தெரியவரும் என அம்மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.