world

img

“உயிர் காக்க நாங்கள் இருக்கிறோம்” - இத்தாலிக்குக் கைகொடுத்த கியூபா

ரோம், ஜன.16- ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியில் பல மருத்துவமனைகள் மூடப்படு வதைத் தவிர்க்க கியூபாவில் இருந்து மருத்துவர்களை அந்நாட்டு அரசு அழைத்துள்ளது. ஜி-7 நாடுகளில் ஒன்றான இத்தாலியில் ரஷ்யா மீது பொரு ளாதாரத் தடைகளை விதித்துக் கொண்டதன் விளைவாக கடுமை யான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே கொரோனா பாதிப்பி லிருந்து முழுமையான விடுபடாத நிலையில், இத்தாலியின் மருத்துவ மனைகள் படு மோசமான நிலையில் உள்ளன. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் இல்லாத காரணத்தினால் மருத்துவமனைகளை இழுத்து மூட  வேண்டிய கட்டாயத்தில் தள்ளப் பட்டனர்.

இந்நிலையில் கியூபாவில் இருந்து மருத்துவர்களை அனுப்பி உதவ வேண்டும் என்று இத்தாலி கோரிக்கை விடுத்தது. அதை உடன டியாக ஏற்றுக் கொண்ட கியூப அரசு 51 மருத்துவர்கள் கொண்ட குழுவை அனுப்பி வைத்துள்ளது. இத்தாலியில் உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் கியூப மருத்துவர்களின் பணிகள் அமையும் என்றும், அந்த அடிப்படையில் இத்தாலி யின் கலப்ரியா மாகாண நிர்வாகத்திற்கும், கியூபா மருத்துவ சேவைகள் அமைப்பிற்கும் இடை யில் உடன்பாடு கையெழுத்தாகி யுள்ளது.

இது குறித்துக் கருத்து  தெரிவித்த கியூப மருத்துவக்குழு வின் தலைவர் லூயிஸ் பெரஸ்-உல்லோவா கூறுகையில், “இது  ஒரு நல்ல ஒத்துழைப்பு மாதிரி யாகும். பிற ஐரோப்பிய நாடு களுக்கும் மகிழ்ச்சியோடு விரிவு படுத்துத் தயாராக இருக்கிறோம். 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இரண்டு மருத்துவர் குழுக்கள் இத்தாலிக்கு வந்து கொரோனா எதிர்கொள்ளப் பெரும் பணியைச்  செய்தன. அந்தப் பணிதான் கலப்ரியா மாகாண நிர்வாகத் தலை வர் ராபர்ட்டோ ஓச்சுய்ட்டோவின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது” என்றார். மருத்துவ சேவையை ஆற்றுவதற்காக எவ்வளவு விரைவில் இத்தாலி மொழியைக் கற்றுக் கொள்ள முடியுமோ, அவ்வ ளவு விரைவாக அதையும் கற்றுக் கொள்வார்கள் என்றும்தெரிவித்தார்.

தற்போது கையெழுத்தான உடன்பாட்டின்படி, 2023 ஆம் ஆண்டின் நிறைவிற்குள் மேலும்  440 மருத்துவ சிறப்பு வல்லுநர்களை கியூபாவில் இருந்து அழைத்து வரப் போகிறார்கள். உயிர் காக்கும் சிகிச்சைகளை இவர்கள் மேற் கொள்ள உள்ளனர். கியூப மருத்து வர்களை அழைத்து வருவதைத் தடுக்க சில வலதுசாரி அரசியல்வாதி கள் முயற்சிகளை செய்தனர். பற்றாக்குறை தீரும் வரையில் கியூப மருத்துவர்களின் உதவியை நாடு வதைத் தவிர வேறு வழியில்லை என்று நிர்வாகம் உறுதியாக நின்று விட்டது. சமூக ஆர்வலர்களும் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். ஜி-7 நாட்டில் மருத்துவம் மற்றும் சுகாதாரம் இவ்வளவு மோசமாக எப்படி இருக்கிறது? இங்குள்ள மருத்துவத்துறையை முடுக்கி விட கியூபாவில் இருந்து மருத்துவர்கள் ஏன் தேவைப்படுகிறார்கள்? இதற்கிடையில் உக்ரைனுக்கு 7 ஆயிரத்து 600 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயுதங்களை உக்ரைனுக்கு நாம் அனுப்பிக் கொண்டிருக்கிறோமே? என்று கேள்வி கேட்டுள்ளனர். 

200 கோடி சிகிச்சைகள்

1959 ஆம் ஆண்டில் கியூபாவில் சர்வாதிகார ஆட்சியைக் கவிழ்த்து விட்டு, புரட்சிகர ஆட்சி அமைந்ததில் இருந்தே கியூப மருத்துவர்கள் உலகம் முழுவதும் பயணம் செய்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். நில நடுக்கம், தொற்று நோய், வெள்ளத்தின் பின் ஏற்படும் சுகாதாரக்கேடு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளின்போதும், ஏராளமான நாடுகளுக்கு கியூபா உதவி வருகிறது. தென் அமெரிக்க நாடுகளில் கண்ணொளித் திட்டம் கியூபாவின் உதவியோடு அரங்கேறி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் பார்வையை இழக்காமல் இந்தத் திட்டம் பார்த்துக் கொண்டது. கடந்த 64 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஆறு லட்சம் கியூப மருத்துவர்கள் 166 நாடுகளில் சேவை ஆற்றியிருக்கிறார்கள். 200 கோடி சிகிச்சைகளை செய்து இதுவரையில் உலகில் யாரும் செய்ய முடியாத சாதனையைச் செய்திருக்கிறார்கள். கோடிக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இந்த மருத்துவப் பணிகள் அனைத்தையும் கடமையாக நினைத்து செய்திருக்கிறார்கள். வணிக ரீதியான ஒன்றாக இது மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தற்போது 56 நாடுகளில் கியூபாவின் 23 ஆயிரத்து 792 மருத்துவர்கள் பல்வேறு மருத்துவப் பணிகளைச் செய்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள், மக்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று சிகிச்சை அளிக்கின்றனர். அப்பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படுகின்றன. அங்கேயே தேவைப்படும் மருந்துகள் வழங்கவும், சிறிய அறுவை சிகிச்சைகள் செய்யும் ஏற்பாடுகள் உள்ளன. இத்தகைய அற்புதமான பணிகளைச் செய்து வரும் கியூபாவை பயங்கரவாதத்திற்கு உதவி தரும் நாடுகளில் பட்டியலில் அமெரிக்கா வைத்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிளின்கென் கொலம்பியாவிற்கு பயணம் மேற்கொண்டார். அந்நாட்டின் ஜனாதிபதி குஸ்தவோ பெட்ரோவை அவர் சந்தித்தார். கியூபாவை அந்தப் பட்டியலில் இருந்து எடுக்குமாறும், பல நாடுகளுக்கு உதவி செய்து வரும் கியூபாவை அப்படிப்பட்ட பட்டியலில் வைத்திருப்பது கூடாது என்றும் குஸ்தவோ பெட்ரோ, பிளின்கெனிடம் வலியுறுத்திப் பேசினார்.