அமெரிக்காவின் கல்வித்துறையின் புள்ளிவிபரங்களின்படி குழந்தைப் பருவத்தைத் தாண்டியவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஆறாம் தரத்திற்கு மேல் படிக்க முடியாது என்று கூறப்படுகிறது.
நீண்ட காலமாகவே அமெரிக்காவில் எழுத்தறிவு குறித்த பிரச்சனை இருந்து வருகிறது. அண்மைக்காலத்தில் இது மோசமாகியுள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த எழுத்தறிவுப் பிரச்சனை என்பது வயது வந்தவர்களுக்கு மட்டுமில்லாம, அமெரிக்கக் குழந்தைகள் மத்தியிலும் இது காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், லட்சக்கணக்கான மாணவர்கள் அமெரிக்கப் பள்ளிகளில் இருந்து படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு வெளியேறுகிறார்கள். அவர்கள் உயர்நிலைப் படிப்பை முடிக்காமலேயே நின்றுவிடுகிறார்கள்.
"என்னால் வாசிக்க முடியாது"
ஆய்வு விபரங்கள் பல்வேறு அதிர்ச்சியான தகவல்களைத் தருகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் உங்கள் அருகில் உட்கார்ந்திருந்தால், செய்தித்தாளை அவரிடம் நீட்டிப் பாருங்கள். அவரால் அதைப் படிக்க முடியாமல் போவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன. என்னால் வாசிக்க முடியாது என்று உங்கள் காதுகளில் அவர் கிசுகிசுத்துக் கொண்டிருப்பார். பெருந்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. 2021-22 ஆம் ஆண்டில் இருந்த மாணவர் சேர்க்கையைவிட குறைவாகவே மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்பது 75 விழுக்காடு பள்ளிகளின் நிலைமையைப் பார்த்தால் தெரிகிறது.
வரலாற்று ரீதியாகவே, பல உரிமைகளும், சுதந்திரமும் சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினருக்கே வழங்கப்படும் என்று அமெரிக்க உயர்மட்டத்தினரும், அதிகாரிகளும் கருதினர். கட்டுப்படுத்தவும், ஒடுக்கவும் பல்வேறு உரிமைகளை மறுப்பதே அவர்களின் உத்தியாக இருந்தது. அமெரிக்காவின் வரலாறு முழுக்க, எழுத்தறிவு மற்றும் வாசிக்கும் திறமை ஆகியவை உயர்தர வகுப்பைச் சேர்ந்த வெள்ளையருக்கு தரப்படும் தனிச்சலுகைகளாகவே இருந்துள்ளது. கட்டணமில்லா பள்ளிகள் அன்று இருக்கவில்லை. ஏழைகள் மற்றும் சிறுபான்மையினர், குறிப்பாக ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள், கல்வியைப் பெற அனுமதிக்கப்படவில்லை.
1831 ஆம் ஆண்டில் அடிமைகள் கலகம் நடந்தபிறகு, மேரிலேண்டு, கென்டக்கி, டென்னிஸி ஆகிய மாநிலங்களைத் தவிர, அடிமைகள் முறை இருக்கும் மற்ற அனைத்து மாநிலங்களும், அடிமைகளக்கு வாசிக்க மற்றும் எழுதக் கற்றுத்தருவது சட்டவிரோதம் என்று அறிவித்து விட்டன. கல்வியைப் பெற அனுமதிக்கப்படாதததற்கு வர்க்க அமைப்பு முறையே காரணமாக இருந்திருக்கிறது. அந்த அமைப்பைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும். வறுமையிலிருந்து ஏழை ஒருபோதும் எழுந்து வந்து விடக்கூடாது. உயர்வகுப்பு வெள்ளையரின் அதிகாரத்திற்கு உட்பட்டே அவர்கள் எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வந்தது. அதனால்தான் இன்றைக்கு, லட்சக்கணக்கான ஆப்பிரிக்க-அமெரிக்க மக்களால் வாசிக்க முடியாது என்ற அவல நிலை உருவாகியுள்ளது.
எழுத்தறிவு நிலை பற்றி ஜான் கெகன் என்ற வல்லுநர், "எழுத்தறிவு என்பதைப் பல வகைகளில் புரிந்து கொள்ளலாம் என்று நான் நினைக்கிறேன். எழுத்தறிவு என்பது வெறும் வாசிப்பு என்றால், அதை மூன்றாவது அல்லது நான்காவது தரத்தில் படிக்கும்போதே பெற்று விடுவார்கள். சாதாரணமாகப் படித்தாலே பத்து வயது மாணவரால் வாசித்துவிட முடியும். இதோடு, மொழியைப் புரிந்து கொள்வது, வார்த்தை வளம், இலக்கணம் உள்ளிட்டவற்றைப் புரிந்து கொள்வதேயாகும். எழுத்தறிவை இப்படிப் புரிந்து கொள்வது ஒரு புறம். மறுபுறத்தில் எழுத்தறிவு என்பது சமூகத்தைப் புரிந்து கொள்வதாகும்" என்கிறார்.
"சமூகத்தைப் புரிந்து கொள்வதில் அமெரிக்கர்கள் பெரிய அளவில் பலவீனமாக இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்து கொள்வதில் அவர்களுக்கு மிகவும் குறைவான புரிதலே இருப்பதாக நான் நினைக்கிறேன்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் நீதித்துறை தரும் புள்ளிவிபரங்கள் எழுத்தறிவின்மையின் விளைவுகளைக் காட்டுகிறது. அதன்படி, அமெரிக்கச் சிறைகளில் இருப்பவர்களில் 75 விழுக்காட்டினர், மிகவும் குறைவான எழுத்தறிவு பெற்றவர்களாகவோ அல்லது உயர்நிலைப் பள்ளிக்கல்வியைக் கூட முடிக்காதவர்களாகவோ இருக்கிறார்கள். ஐந்தில் இருவரால் வாசிக்க முடியாது. வாசிக்க அல்லது எழுத முடியாது என்பதோடு, எண்களை வைத்து கணக்கிடத் தெரியாதவர்களாக உள்ளனர். இது அவர்களின் வாழ்க்கையைப் பெரிய அளவில் பாதிக்கிறது.
அவர்களின் வேலைகளை கணிதம் பற்றி எழுத்தறிவின்மை பாதிக்கிறது. தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கை, அரசுத்துறையுடன் உரையாடுவது ஆகியவற்றில் இந்த எழுத்தறிவின்மை பெரும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது.
அதிர்ச்சியான புள்ளிவிபரம்
ஒரு புள்ளிவிபரத்தின்படி, 3 கோடியே 20 லட்சம் அமெரிக்கர்களால் வாசிக்க இயலாது. வயது வந்தர்கள் மத்தியில் படுமோசமான நிலையில் எழுத்தறிவு இருக்கிறது. ஆனால், அமெரிக்கக் குழந்தைகள் மத்தியில் எழுத்தறிவு நல்ல நிலையில் என்று இதற்கு அர்த்தமாகிவிடாது. எட்டாவது தரத்தில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களில் 27 விழுக்காட்டினரால் வாசிக்க இயலாது என்பது மேலும் அதிர்ச்சியைத் தருகிறது.
காலப் நிறுவன ஆய்வின்படி, ஒரு தனிநபரின் வாழ்நாள் வருமானத்தின் அளவு எழுத்தறிவின்மையால் பாதிக்கப்படுகிறது. அந்தப் பாதிப்பின் அளவு 30 முதல் 42 விழுக்காடு வரையில் இருக்கிறது. இதனால் எழுத்தறிவு மூலம் சமூக மற்றும் பொருளாதார அசமத்துவத்தை சரி செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அமெரிக்காவில் உள்ள தற்போதைய கல்வி நிலையானது, மிகவும் குறைவான வருமானம் பெறும் வேலைகளைப் பெறும் வகையில்தான் இருக்கிறது. அதோடு, லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இதுவும் கல்வி பெறும் ஆர்வத்தைக் குறைக்கிறது.
எழுத்தறிவின்மை அமெரிக்காவின் நீண்ட காலப் பிரச்சனை என்பதோடு, அதைச் சரி செய்வதற்கான வேலையும் நடைபெறவில்லை என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.