world

img

‘சார்லஸ் எங்களுக்கு மன்னர் அல்ல’ ஜமைக்கா திட்டவட்டம்

கிங்ஸ்டன், மே 8- தங்கள் நாட்டுக்கு அடையாளப்பூர்வ தலைவர் பிரிட்டன் மன்னர் என்பதிலிருந்து விடுதலை பெற நாங்கள் விரும்புகிறோம் என்று ஜமைக்கா அறிவித்திருக்கிறது. சில காலமாக, இந்தக் கோரிக்கையை முன்வைத்து வருவதால் புதிய மன்னர் பொறுப்பேற்றுக் கொண்டிருந்த வேளையில், ஜமைக்காவின் சட்ட மற்றும் அரசியலமைப்பு விவகார அமைச்சர் மர்லீன் மலாஹு் ஃபோர்ட்டேயிடம் செய்தியாளர்கள் இந்தக் கேள்வியை முன்வைத்தனர். அப்போது பேசிய அவர், “மன்னர் பொறுப்பேற்பதை பிரிட்டன் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அது அந்நாட்டிற்கானது. ஜமைக்கா, ஜமைக்கா மக்கள் கைகளில் இருக்க வேண்டும் என்பதற்கான நேரம் வந்துவிட்டது. நாம் அதைச் செய்தாக வேண்டும். மன்னர் ஆட்சியில் இருந்து வெளியேற வேண்டும்” என்றார். பிரிட்டன் மட்டுமல்ல, ஆன்டிகுவா மற்றும் கினியா, ஆஸ்திரேலியா, பஹாமாஸ், பெலிஸ், கனடா, கிரெனடா, ஜமைக்கா, நியூசிலாந்து, பப்புவா நியூகினியா, செயின்ட் கிட்ஸ் நெவிஸ், செயின்ட் லூசியா, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனாடின்ஸ், சாலமன் தீவுகள், துவாளு ஆகிய நாடுகளுக்கும் மூன்றாவது சார்லஸ் தான் அடையாளப்பூர்வ மன்னராக இருப்பார். இதில், அவரை மன்னராக ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஜமைக்கா குரல் எழுப்பியிருக்கிறது. 

பிரிட்டன் மன்னரைத் தங்கள் மன்னராக ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று சொல்வது புதியது இல்லை. 1992 ஆம் ஆண்டில் மன்னர் தொடர்பான உறவுகளை முறித்துக் கொண்ட மொரிசியஸ், குடியரசாகத் தன்னை அறிவித்துக் கொண்டது. 2021 ஆம் ஆண்டில், தங்கள் நாட்டின் அடையாளப்பூர்வத் தலைவர் பதவியில் இருந்து ராணி எலிசபெத்தை நீக்குவதாக பார்படாஸ் தெரிவித்தது. தற்போது ஜமைக்கா அந்த வேலையைத் தொடங்குகிறது. ராணி எலிசபெத் மறைவுக்குப் பிறகு மேலும் பல நாடுகளில் இந்தக் கோரிக்கை முன்வந்திருக்கிறது.  ஜமைக்காவுக்கு புதிய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றுவது என்று முடிவு எடுத்திருக்கிறார்கள். வல்லுநர்கள் கொண்ட குழுவால் அது எழுதப்பட்டு, 2024 ஆம் ஆண்டில் பொது வாக்கெடுப்பு முறை மூலமாக அது மக்கள் முன்னால் வைக்கப்படும் திட்டமும் இருக்கிறது. மன்னர் தலைமை என்ற அம்சத்தில் இருந்து வெளியேறி முழுமையான விடுதலை பெற்ற நாடாக மாறுவது மற்றும் தங்களுக்கான நாட்டின் தலைவரைத் தேர்வு செய்து கொள்வது உள்ளிட்ட அம்சங்கள் அந்தப் புதிய சட்டத்தில் இடம் பெறவுள்ளன. 1962 ஆம் ஆண்டில் பெரும்பாலான கரீபியத் தீவு நாடுகள் பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்று விட்டன. ஆனால், அவற்றில் மன்னராட்சி தொடர்கிறது. 6 குட்டி நாடுகள் மற்றும் 900 குட்டித் தீவுகளைக் கொண்டுள்ள சாலமன் தீவுகளும் மன்னராட்சியில் இருந்து வெளியேற வேண்டும் என்று விரும்புகின்றன. அடுத்த மன்னர் பொறுப்பேற்கையில், அவரின் அடையாளப்பூர்வ தலைமை இருக்கும் நாடுகளின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1788 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா, நியூகினியா மற்றும் நியூசிலாந்து ஆகிய பகுதிகளுக்கு ஆங்கிலேயர்கள் வந்தனர். உள்ளூர்ப் பழங்குடியினரைக் காலி செய்த இவர்கள் அவற்றை தங்கள் நிலங்களாக மாற்றிக் கொண்டனர். 1901 ஆம் ஆண்டில் ஒரு ஒன்றியமாக மாறிய ஆஸ்திரேலியா, மணிமுடியைத் தங்கள் அடையாளப்பூர்வத் தலைவராக ஏற்றுக் கொண்டது. ஆனால், அங்கும் மன்னர் தலைமைக்கு எதிரான குரல்கள் எழுந்தவண்ணம் உள்ளன. 1999 ஆம் ஆண்டில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால், புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஐந்து டாலர் நோட்டில் மன்னர் படம் இடம் பெறாது என்று அறிவித்திருக்கிறார்கள். தற்போதைய பிரதமர் அன்டோனி ஆல்பனீஸ் மீண்டும் வெற்றி பெற்றால், 2025 ஆம் ஆண்டில் மறுபடியும் பொது வாக்கெடுப்பு நடைபெறும்.