world

img

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்த ஸ்லோவேனியா!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லோவேனியா பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்துள்ளது.

காசா - இஸ்ரேல் போர் கடந்த 200 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதுவரை இப்போரில் சுமார் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் எனவும், 75 சதவீத பேர் குழந்தைகள் எனவும் பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

ஆனாலும், காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் குறைந்ததாக இல்லை. சில நாட்களுக்கு முன்னர் ஐ.நா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இதை கண்டுகொள்ளாத இஸ்ரேல், ரஃபா அகதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 45 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து உலக நாடுகளின் கவனம் ரஃபாவின் பக்கம் திரும்பியது. பல்வேறு இடங்களில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் வெடித்தன. இருப்பினும் போர் நீடிக்கும் என இஸ்ரேல் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் ஸ்பெயின், நார்வே, அயர்லாந்து ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனிநாடாக சமீபத்தில் அங்கீகரித்தன. இதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் பாலஸ்தீனத்தை தனிநாடாக மற்றொரு ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியா அங்கீகாரம் அளித்துள்ளது. பாலஸ்தீனத்தை சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரிக்க, ஸ்லோவேனியா நாடாளுமன்றத்தில் நடத்திய வாக்கெடுப்பு வெற்றி பெற்றது.