இந்தியா உட்பட, 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணியர், ஈரான் வருவதற்கு, விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு நேற்று அறிவித்தது.
இந்தப் பட்டியலில் இந்தியா, ரஷ்யா, சவுதி அரேபியா, கத்தார், ஜப்பான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
மேற்காசிய நாடான ஈரானில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. அதன் பின் செய்தியாளர்களிடம் அந்நாட்டுச் சுற்றுலாத் துறை அமைச்சர் எஸதுல்லாஹ் சர்காமி கூறுகையில், ''ஈரானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, இந்தியா உட்பட 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணியர் ஈரான் வர விசா தேவையில்லை என அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கும், உலகெங்கிலும் உள்ள நாடுகளில் இருந்து அதிக பார்வையாளர்களை ஈர்ப்பதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், மலேசியா, இலங்கை, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் இந்தியப் பயணியருக்கு விசா தேவையில்லை என அறிவித்தன. அந்த வரிசையில் தற்போது ஈரான் இணைந்துள்ளது.
நம் நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக, 'மெக்கின்ஸே' ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த 2022-இல் மட்டும், 1.30 கோடி இந்தியர்கள் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.