சவூதி ஆரேபியா நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 886 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.
டிசம்பர் 10 ஆம் தேதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய சவூதி அமைப்பு சார்பில் இணைய வழியிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டு, சர்வதேச அளவில் நடைபெறும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் குறித்து விவாதித்தனர். குறிப்பாக, அரசு பயங்கரவாதம், பெண் உரிமைகள், கைதுகள், மரண தண்டனை போன்றவை தொடர்பான ஆய்வறிக்கைகளை முன்வைத்தனர்.
இதில் சவூதி அரேபியா நாட்டில் கடந்த 2016 ஆண்டிற்கு பிறகு தற்போது வரை 886 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது தொடர்பாக ஆழ்ந்த கவலை தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, இவர்களில் 12 சிறுவர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட பெண்களும் அடங்குவர். மேலும், 41 வெளிநாட்டினருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு அவர்களின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலனோர் அரசியல் ரீதியான பழிவாங்கப்பட்டவர்கள். அதாவது, அந்நாட்டு அரசிற்கு எதிராக கலகம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக கூறி தேச விரோத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். மேலும், இஸ்லாமிய அறிஞர்கள், பெண் உரிமை போராளிகள் உள்ளிட்டோரும் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதபோல், பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி 44 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.