வாஷிங்டன், மார்ச் 2- உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் குண்டுகள் வீசப்பட்டு குடியிருப்புகள் தகர்க்கப்பட்டது ரஷ்யாவின் தாக்குதல்களால் ஏற்பட்டதல்ல என்று தெரிய வந்துள்ளது. தனது நலன்களைப் பாதுகாக்கவே உக்ரைன் மீதான தாக்குதல் துவக்கப்பட்டது என்று ரஷ்யா கூறி வரும் வேளையில், மேற்கத்திய நாடுகளும், ஊடகங்களும் அனைத்துத் தாக்குதல்களும் ரஷ்யாவால் நடத்தப்படுவது போன்ற செய்திகளை வெளியிட்டு வருகின்றன. உக்ரைனின் இரண்டு பகுதிகள் தங்களைக் குடியரசுகளாக அறிவித்துக் கொண்ட நிலையில் அந்தப் பகுதிகள் மீது உக்ரைனின் தாக்குதல்கள் ஏற்கனவே துவங்கி விட்டன. டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய அந்த இரண்டு பகுதிகளும் ரஷ்ய எல்லையில் உள்ளன.
தங்கள் பாதுகாப்பு குறித்த கவலைகளை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அங்கீகரிக்காமல் உக்ரைனை கூட்டாளிகளாகச் சேர்த்துக் கொள்ள முயன்றதால், ரஷ்யா தாக்குதலைத் தொடுத்துள்ளது. தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில் உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் குடியிருப்புகள் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக மேற்கத்திய ஊடகங்கள் காட்சிகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால், அந்தத் தாக்குதல்கள் உக்ரைன் படைகளால் நடத்தப்பட்டவை என்பது அம்பலமாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ரஷ்யாவின் பிரதிநிதி வாசிலி நெபன்சியாவும் இதைக் குறிப்பிட்டுள்ளார். சொந்த மக்கள் மீது நடத்திக் கொண்ட தாக்குதல்களை வெட்கமேயில்லாமல் ரஷ்யாவின் மீது பழி சுமத்துகிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், டான்பாஸ் மக்கள் படும் துயரங்கள் பற்றி ஒரு வரி கூட மேற்கத்திய நாடுகள் பேச மறுக்கின்றன என்று சுட்டிக்காட்டினார். மேலும், மருத்துவமனைகள் மற்றும் குழந்தைகளின் பள்ளிக்கூடங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாக வெளியிடப்படும் செய்திகள் பொய்யானவை என்று கூறிய அவர், “ரஷ்யாவுக்கு எதிராக செய்திகள் மூலமாகவும் போர் நடத்தப்படுகிறது. பொது மக்கள் இருக்கும் இடங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. மாறாக, உக்ரைன் ராணுவமும், தேசியவாதிகளும் சொந்த மக்கள் மீதே தாக்குதலைத் தொடுத்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.