world

img

தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டில் பாலஸ்தீனக் குழந்தைகள்

தீவிர ஊட்டச்சத்தின்மையால் காசா பகுதியில்  பாலஸ்தீன  குழந்தைகள் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு பாட்டில் பால் கூட கிடைப்பதில்லை எனவும் பசியின் கொடூரத்தால் மரணத்தின் விளிம்பில் இருப்பதாகவும் தாய்மார்கள் தெரிவிப்பதாக பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

2024 ஜனவரி மாத ஐ.நா  மனிதாபிமான நிறுவனம் காசாவில் உள்ள ஐந்து வயதுக்குட்பட்ட 93,400க்கும் மேற்பட்ட குழந்தைகளை சோதித்ததில் 7,280 குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் என கண்டறியப்பட்டது. போர் துவங்கிய இரண்டு மாதத்திலேயே  ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கத் துவங்கிய நிலையில் நிவாரண உதவியை தடுத்து குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை தீவிரப்படுத்தியுள்ளது இஸ்ரேல் ராணுவம். இஸ்ரேல் ராணுவம் வடக்கு காசா முதல் எகிப்து எல்லையான ரஃபா வரையில் தீவிரமான தாக்குதலை நடத்தி வருவதோடு காசா பகுதியில் இருந்த மருத்துவமனைகள், உணவுக்கூடங்கள், பேக்கரிகள், மருந்துக்கடைகள் என அனைத்தையும் குண்டு வீசி தகர்த்து விட்டது.  உணவு மற்றும் மருந்துகளுக்காக ஐநா அவையை மட்டுமே சார்ந்துள்ளனர். ஆனால் ஐநா நிவாரண பொருட்களையும் காசா பகுதிக்குள் செல்ல விடாமல் இஸ்ரேல் ராணுவம் தடுத்துள்ளது.

 இந்நிலையில் காசாவில் உள்ள குழந்தைகள் தீவிரமான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப் பட்டுள்ளனர். அக்குழந்தைகளின் உடல் மிக மோசமான அளவுக்கு மெலிந்து எலும்புகள் தெரிய உணவுக்காக ஏங்கி இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. காசாவில் போர் துவங்கியதில் இருந்து குழந்தைகள் மீதான இஸ்ரேலின் வன்முறை பல மடங்கு அதிகரித்துள்ளது. குண்டுகளை வீசி படுகொலை செய்வதுடன் பசியை ஆயுதமாக்கியும் படுகொலை செய்து வருகிறது.  

3 நாட்கள் வரை ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் 5 இல் 4 பாலஸ்தீனக் குழந்தைகள் பஞ்சத்தில் தள்ளப்பட்டுள்ளனர். குழந்தைகள் பட்டினியால் வாடுகிறார்கள் என உலக சுகாதார நிறுவன செய்தித் தொடர்பாளர் மார்க்கரெட் ஹாரிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பாலஸ்தீனக்  குழந்தைகளின் தீவிர ஊட்டச்சத்து குறைபாடுக்கு  முக்கிய காரணம் ஐநா அமைப்பின் நிவாரண உதவிகளை இஸ்ரேல் ராணுவம் தடுத்து வைத்திருப்பது தான் என  ஐநா  உதவி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் ராணுவத்தால் இதுவரை 36,439 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.  82,627 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.