world

img

நான்கு மாதத்தில் 3 முறை ஜெலன்ஸ்கியுடன் குலாவும் மோடி

நியூயார்க்,செப்.24- ஐ.நா. பொது அவையில் உரையாற்றுவதற்காக மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மோடி 4 மாதத்திற்குள் 3 ஆவது முறையாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்துள்ளார். இது சர்வதேச நிலைப்பாட்டில் இந்தியா தடம் மாறி வருவதன் வெளிப்பாடா என்ற  கேள்வி எழுந்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா போரில் அமைதியை நிலைநாட்ட இந்தியா தொடர்ந்து முயற்சிப்பதாக பிரதமர் மோடி பேசிவருகிறார். இந்த சந்திப்பிலும் அதையே வலியுறுத்திப் பேசியுள்ளார்.  ஆனால் அதேநேரத்தில் இந்தியாவின் அரசு ஆயுத நிறுவனம் உற்பத்தி செய்யும் ஆயுத உபகரணங்களை, ஐரோப்பிய நாடுகள் வழியாக உக்ரைன் ஓராண்டுக்கும் மேலாக வாங்கி வந்துள்ளது.   உக்ரைன் ஜனாதிபதியை சந்திப்பதற்கு முன் பாலஸ்தீன ஜனாதிபதி முகமது அப்பாஸையும் மோடி சந்தித்துப் பேசியுள்ளார். அவரிடமும் பேச்சுவார்த்தை மூலம் அமைதியைக் கொண்டுவர வேண்டும் என பேசியுள்ளார். மேலும் ஐ.நா. சபையில் பாலஸ்தீனம் உறுப்பினராக இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் எனவும் கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றில் பாலஸ்தீனத்துக்கு தேவையான உதவிகளை இந்தியா வழங்கும் எனவும் கூறியுள்ளார். ஆனால் நடைமுறையில், இந்திய வெளியுறவுத்துறை இதற்கு முரண்பாடாக செயல்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்புகளை 1 வருடத்தில் அகற்ற வேண்டும் என்று ஐநா பொது அவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கவில்லை; நடுநிலை என்ற பெயரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.