NCERT-ன் 12-ம் வகுப்பு பாடப்புத்தகத்திலிருந்த முகலாய சாம்ராஜ்யம் தொடர்பான அத்தியாயம் (முகலாய தர்பார், 16 மற்றும் 17-ம் நூற்றாண்டுகள்) என்ற பாடம் வரலாற்றுப் (இந்திய வரலாறு - பகுதி II) புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, இந்தி புத்தகத்திலிருந்த உருது கவிதைகளும் நீக்கப்பட்டிருக்கின்றன.
கடந்த ஆண்டு 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களில் NCERT பல மாற்றங்களைச் செய்துள்ளது. இவற்றில், 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகமான ‘சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் அரசியல்’ என்ற பாடப்புத்தகத்தில் இருந்து ‘பிரபல இயக்கங்களின் எழுச்சி’ மற்றும் ‘ஒரு கட்சி ஆதிக்கத்தின் சகாப்தம்’ என்ற தலைப்புகள் நீக்கப்பட்டன.
காந்தியின் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை விரும்பியதன் வெளிப்பாடுதான் இந்து தீவிரவாதிகளால் அவர் சுட்டுக்கொள்ளப்பட்டார் என்ற பத்திகளும் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
இதேபோல், 10 ஆம் வகுப்பு பாடப்புத்தகமான ‘ஜனநாயக அரசியல்-II’ லிருந்து ‘ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை’, ‘மக்கள் போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள்’, ‘ஜனநாயகத்திற்கான சவால்கள்’ ஆகிய அத்தியாயங்கள் நீக்கப்பட்டன. குறிப்பிடத்தக்க வகையில், கடந்த 15 ஆண்டுகளாக, நாதுராம் கோட்சே 12ஆம் வகுப்பு வரலாற்றுப் புத்தகத்தில் காந்தியை படுகொலை செய்த ‘புனேவைச் சேர்ந்த பிராமணர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது, தற்போது நீக்கப்பட்டுள்ளது.
NCERT- இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி கூறுகையில், தொற்றுநோயால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் பாடப்புத்தகங்களின் சுமை குறைந்துள்ளதாகவும், இது மன அழுத்தத்தில் உள்ள மாணவர்களுக்கு உதவும் முயற்சியாகவும், சமூகம் மற்றும் தேசத்தின் பொறுப்பாகவும் உள்ளது என்றார்.