சூடானில் உள்ள தங்கள் நாட்டவரைப் பாதுகாப்பாகத் திரும்ப அழைக்கும் பணியில் பல நாடுகள் இறங்கியுள்ளன. சூடானில் உள்ள மர்கா ராணுவ விமானத்தளம் இந்தப் பணியில் பரபரப்பாக இயங்கி வருகிறது.
கார்தோம், ஏப்.24- இருதரப்புக்கிடையில் பத்து நாட்களுக்கு முன்பாகத் தொடங்கிய சண்டை தீராத நிலையில், சூடானில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அண்டை நாடான சாட்டிற்குள் அகதிகளாகப் புகுந்திருக்கிறார்கள். பத்து நாட்களுக்கு முன்பாக சூடானின் தலைநகர் கார்டோம் மற்றும் அதையொட்டிய பல்வேறு நகரங்களில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையில் சண்டை தொடங்கியது. அப்போதிருந்து கிட்டத்தட்ட 20 ஆயிரம் மக்கள் சூடானில் இருந்து வெளியேறியிருக்கிறார்கள். இவ்வளவு பேர் அகதிகளாக வருவார்கள் என்பதை எதிர்பார்க்காத அண்டை நாடான சாட், கடும் நெருக்கடியை எதிர்கொள்கிறது. அகதிகள் மற்றும் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்டம் என்ற அமைப்பு, “மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாகும் ஆபத்து இருக்கிறது. சண்டை நடப்பதால் பலரால் வெளியேறி வர முடியாத நிலை உள்ளது. இல்லையென்றால் அகதிகளின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்திருக்கும், பாதுகாப்பாக வெளியேற முடியும் என்ற நிலை வந்தால், அகதிகள் வருகை பெருகுவது நிச்சயம்” என்று கூறியுள்ளது. இந்தத் திட்டத்தின் இயக்குநர்களில் ஒருவரான பியர்ரே ஹோன்னோரட், “ ஒரு லட்சம் பேருக்கு உணவு ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு உதவ நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறோம்” என்றார். 72 மணிநேரம் போர் நிறுத்தம் என்பதை மீறி இருதரப்பும் சண்டை போட்டுக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.