மாத ஊதியத்தில் வாழ்க்கை நடத்துபவர்களுக்கு பெரும் நெருக்கடியை எரிபொருள் விலையுயர்வு ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குளிர்காலம் நெருங்குவதால் எரிபொருள் தேவை பெரிய அளவில் அதிகரிக்கப் போகிறது. பற்றாக்குறையும் இதுவரையில் காணாத அளவில் இருக்கும் என்று ஸ்காட்லாந்தின் புனித ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்குழுவைச் சேர்ந்த சீன் ஃபீல்டு எச்சரிக்கிறார். நல உதவிகளில் சமாளிப்பவர்கள் மற்றும் மாத ஊதியத்தைப் பெறுபவர்கள் ஆகியோரால் விலையுயர்வை சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள். இது மேலும் முற்றப் போகிறது என்று ஆய்வுக்குழு கூறியுள்ளது.
ரஷ்யாவின் இயற்கை எரிவாயுவைத்தான் ஐரோப்பிய நாடுகள் நம்பியிருக்கின்றன. இதில் பிரிட்டனும் விதிவிலக்கில்லை. ஒரு நாட்டில் மட்டும் நெருக்கடி என்றால் தப்பித்துக் கொள்ள வாய்ப்புள்ளது. அனைத்து ஐரோப்பிய நாடுகளும் நெருக்கடியில் சிக்கியிருப்பதால், குளிர்காலத்தில் நடுங்கியவாறே நேரத்தைக் கடக்கும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று ஸ்காட்லாந்து ஆய்வுக்குழு எச்சரிக்கிறது.
பழங்காலத்தில் கையாண்ட பழக்கங்களுக்கு மக்கள் மாறுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மீண்டும் மரங்களை வெட்டி, மரக்கட்டைகளுக்கு நெருப்பு வைத்து பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஜெர்மனி மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளில் நெருப்புக்காக மரக்கட்டைகளைப் பயன்படுத்துவது பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது. சூட்டிற்காக இயற்கை எரிவாயுவைத்தான் பிரிட்டனில் உள்ள பெருவாரியான மக்கள் பயன்படுத்துகிறார்கள். தற்போது ஏற்பட்டுள்ள பற்றாக்குறை, பெரும் சவாலான குளிர்காலத்தை அந்நாட்டு மக்களுக்கு அளிக்கப் போகிறது.