ஜெனிவா, ஜூலை 21- சர்வதேச அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியதாக செயற்கை நுண்ணறிவு மாறியிருக்கிறதா என்பதைப் பற்றி விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், “செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது தொடர்பாகவும், அதை நிர்வகிக்கவும் ஒரு புதிய சர்வதேச அளவிலான அமைப்பு தேவைப்படுகிறது. தொழில்நுட்பம் தொடர்ந்து நமக்கு ஆபத்துகளையும், பலன்களையும் கொண்டு வருகிறது” என்று குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், “செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி போர் செய்யும் ஆபத்தைக் களைய சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட உடன்பாட்டை எட்ட வேண்டும். இத்தகைய உடன்பாடு 2026 ஆம் ஆண்டுக்குள் உருவாக்கப்பட்டு, அதில் உலக நாடுகள் கையெழுத்திட வேண்டும்” என்று அவர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கும் விதிகள் வளரும் நாடுகளின் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் ஒரு காட்டுக்குதிரை போன்று பாய்ந்து கொண்டிருக்கக்கூடாது என்றும் சீனப் பிரதிநிதி எச்சரித்தார். ரஷ்யா, அமெரிக்கா பிரிட்டன் ஆகிய நாடுகளும் அதன் ஆபத்து பற்றி எச்சரிக்கை விடுத்தன.