பெர்லின், ஜூன் 16- தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய போர் ஒத்திகையை நடத்திக் கொண்டிருக்கும் அமெரிக்கா தலைமையிலான ராணுவக் கூட்டணியின் நடவடிக்கை ஏராளமான விமானப் பயணங்களை ரத்து செய்ய வைத்திருக்கிறது. கடந்த திங்கட்கிழமை(ஜூன் 12) அன்று நேட்டோவின் மிகப்பெரிய போர்ப்பயிற்சி தொடங்கியது. அந்த அமைப்பின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய அளவில் போர்ப் பயிற்சி நடந்து வருகிறது. அதில் 25 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் படை வீரர்கள் மற்றும் 250 போர் விமானங்கள் இதில் பங்கேற்று வருகிறார்கள். ஏர் டிஃபென்டர்23 என்று அழைக்கப்படும் இந்தப் பயிற்சிக்கு ஜெர்மனியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதோடு, ஜெர்மனியில் இயங்கி வரும் பயணிகள் விமானங்களில் சுமார் 800 விமானங்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன. ஏராளமான கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. செலவு தாக்குப் பிடிக்க முடியாத நிலையில், பல விமானங்களின் பயணங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. பல பயணிகளின் பயணச் சீட்டுகள் வேறு விமானங்களுக்கு மாற்றி விடப்பட்டன. நேட்டோவின் போர்ப் பயிற்சி ஜூன் 23 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. பாதுகாப்பு வல்லுநர்களின் ஒருவரான தாமஸ் வெஃபிங், “ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யாவால் ஆபத்து இல்லை. அமெரிக்காவால்தான் ஆபத்து நிகழும். ஆசிய-ஐரோப்பியப் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதையே தனது குறிக்கோளாக அமெரிக்கா நினைக்கிறது” என்கிறார். உக்ரைன் நெருக்கடி கடுமையான கட்டத்தில் இருக்கும் நிலையிலும், தனது பலத்தைக் காட்டவே அமெரிக்கா இந்தப் பயிற்சியை நடத்திக் கொண்டிருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளர்.