world

img

சட்டவிரோத ஆட்சிக் கவிழ்ப்புகளை அனுமதியோம்

ஆப்பிரிக்க ஒன்றியம் உறுதி

அட்டிஸ் அபாபா, பிப்.22- ஆப்பிரிக்கக் கண்டத்தில் ஜனநாயகத்திற்கு விரோதமாக ஆட்சி மாற்றங்கள் ஏற்படுவதை முற்றிலும் அனுமதிக்க முடியாது என்று ஆப்பிரிக்க ஒன்றிய உச்சி மாநாடு உறுதியாகத் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க ஒன்றிய நாடுகள் பங்கேற்ற உச்சி மாநாடு எத்தியோப்பியாவின் தலைநகர்  அட்டிஸ் அபாபாவில் நடைபெற்றது. பல்வேறு  பிரச்சனைகள் விவாதிக்கப்பட்ட நிலையில் ஆப்பி ரிக்கக் கண்டத்தில் பல்வேறு ஆட்சியாளர்கள் கலகக்காரர்களாலும், ஜனநாயகத்தை நசுக்கியும்  தூக்கி எறியப்படுவதைக் கவலையோடு பார்த்திருக்கிறார்கள். அத்தகைய ஜனநாயக விரோத மாற்றங்களை அனுமதிக்கக்கூடாது என்று மாநாட்டில் முடிவு எடுத்துள்ளனர்.  மாநாட்டின் நிறைவில் செய்தியாளர்களிடம் பேசிய ஆப்பிரிக்க ஒன்றிய அரசியல் விவ காரத்துறை ஆணையர் பங்கோலே அடியோயே,  “அரசியல் சட்ட அமைப்புகளுக்கு விரோதமான ஆட்சி மாற்றங்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று உச்சி மாநாடு உறுதியாக முடிவெடுத்திருக்கிறது. மீண்டும் அரசியல் சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி அமைவதற்குத் தேவையான உதவிகளை ஆப்பிரிக்க ஒன்றியம் தனது உறுப்பு நாடு களுக்கு செய்யும். மொத்தத்தில், ஜனநாயகம் ஆழமாக வேரூன்றி நிற்க வேண்டும். அதுதான் நமது நோக்கமாகும்” என்றார்.

அந்தஸ்து ரத்து

பர்கினோ ஃபசோ, கினியா, மாலி மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சிகளைக் கவிழ்த்துவிட்டு, அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. அங்கு ஜனநாயக ஆட்சிகள் மலரும் வரையில் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் என்ற  அந்தஸ்தை ரத்து செய்திருக்கிறார்கள். ஜனநாயக விரோத ஆட்சி மாற்றங்களோடு, ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையிலான தாராள வர்த்தக ஒப்பந்தம், சுற்றுச்சூழல் மாற்றம் மற்றும்  சச்சரவுகள் உள்ளிட்டவை பற்றியும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டன.  தாராள வர்த்தக ஒப்பந்தத்தை நிறை வேற்ற அனைத்து வகையான நடவடிக்கைகளை யும் மேற்கொள்வேன் என்று புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவர் அசாலி அஸ்சோமனி தெரிவித்திருக்கிறார். இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், மக்கள் தொகையின் அடிப்படையில் உலகிலேயே மிகப்பெரிய தாராள வர்த்தக ஒப்பந்தமாக இருக்கும். 55 உறுப்பு நாடுகளில் 54 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக் கொண்டுள்ளன. எரித்ரியா மட்டும் இந்த உடன்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை.  54 நாடு களின் மக்கள் தொகை 140 கோடியைத்தொடுகிறது. 

இஸ்ரேல் இல்லை

கடந்த முறை பார்வையாளர் அந்தஸ்துடன் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரி வித்தன. பாலஸ்தீன மக்கள் மீது தொடர் தாக்கு தல்களை நடத்தி வருவதால் எதிர்ப்பு கிளம்பியது. இந்த மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கலாமா அல்லது வேண்டாமா என்ற விவாதம் தொடர்ந்து கொண்டே இருந்தது. இதனால் இஸ்ரேலின் பிரதி நிதிகளுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. தங்கள் பங்கேற்பை நிராகரித்ததன் பின்னணி யில் அல்ஜீரியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

புதிய தலைவர்

அட்டிஸ் அபாபாவில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் 2023 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கோமோரோஸ் ஒன்றியத்தின் ஜனாதிபதியான அஸாலி அஸ்சோமனி பொறுப்பேற்றுள்ளார். 2002 ஆம் ஆண்டில் இந்த ஒன்றியம் தொடங்கப்பட்டது. லிபியாவின் ஜனாதிபதியாக இருந்த முகமது கடாபியின் முயற்சியால் இது உருவானது. 1999 ஆம் ஆண்டுவரையில் ஆப்பிரிக்க நாடுகளின் ஒற்றுமை என்ற பெயரில் இயங்கி வந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் அனைத்தும் இதில் இணைந்தன. தற்போது 55 நாடுகள் இதில் இணைந்திருக்கின்றன.