குயிட்டோ, பிப்.13- ஈக்குவடாரில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பு மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் இடதுசாரிக் கட்சியான குடிமக்கள் புரட்சிகரக் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. பிப்ரவரி 5-ஆம் தேதியன்று நாடு முழுவதும் உள்ள மேயர்கள் உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல்கள் நடை பெற்றன. இதோடு அரசியலமைப்பு சட்டத்தில் சில மாற்றங்கள் கோரும் 8 அம்சத் தீர்மானங்கள் மீது பொது வாக்கெடுப்பும் நடைபெற்றது. இந்தத் தேர்தல்களில் ஆளுங்கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. பிர தான எதிர்க்கட்சியான குடிமக்கள் புரட்சிகரக் கட்சி பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. பாதுகாப்பை முன்னிறுத்துவது என்பது உள்ளிட்ட 8 கேள்விகளை மக்கள் முன்னால் வலதுசாரி அரசு வைத்தது. உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தல்களோடு அதன் மீது பொது வாக்கெடுப்பும் நடத்த முடிவு செய்தார்கள். 8 கேள்வி களுக்கும் எதிராக மக்கள் வாக்களித் திருக்கிறார்கள். வலதுசாரி அரசு முன்வைத்த எந்தத்திருத்தத்தையும் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆளுங்கட்சிக்கு பலமான இடங்கள் என்று கருதப்பட்டவற்றிலும் இடதுசாரிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல்களைப் பொறுத்தவரையில், பெரும்பாலான மேயர் பொறுப்புகளை இடதுசாரிகள் கைப்பற்றியுள்ளார்கள். தலைநகர் குயிட்டோவில் இடதுசாரி வேட்பாள ரான பாபெல் முனோஸ் மேயராகத் தேர்வாகியிருக்கிறார். நாட்டின் தென்மேற்குக் கடற்கரைப் பகுதியான குவாயாஸ் வலதுசாரிகளின் கோட்டை யாக இருந்தது. இங்கு கடந்த 30 ஆண்டுகளாக வலதுசாரிக் கட்சி தான் மேயர் பொறுப்பில் இருந்து வந்தது. முதன்முறையாக இடதுசாரி வேட்பாளர் வெற்றி பெற்று மேயரா கிறார். ஈக்குவடாரின் மிகப்பெரிய நகர மான குவாயாகுயிலில் அகுய்லெஸ் ஆல்வரெஸ் மேயராகத் தேர்வு செய்ப் பட்டிருக்கிறார். இவர் இடதுசாரிக் கட்சி யான குடிமக்கள் புரட்சிகரக் கட்சி சார்பில் போட்டியிட்டார். இது போன்று குயென்கா உள்ளிட்ட பல்வேறு முக்கியமான நகரங்களில் வலதுசாரி கள் தோல்வியைத் தழுவியுள்ளனர். குவாயாஸ் பகுதியில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட மேயர் பொறுப்புகளை இடதுசாரிகள் பெற்றுள்ளனர். பெரும் தோல்வியை ஆளுங்கட்சி பெற்றுள்ளதால் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்திற்கான தேர்தல்கள் முன்கூட்டியே நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பலவீனமான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் குறித்துக் கருத்து தெரிவித்த ஆய்வு மையம் ஒன்றின் வல்லுநர் வால்டர் ஸ்புர்ரியர், ‘‘பெரும் அளவில் பலவீனமான ஜனாதிபதி தற்போது பதவியில் இருக்கிறார். பொது வாக்கெடுப்பில் வெற்றி கிடைக்கும் என்று ஜனாதிபதி லாஸ்சோ நம்பிக் கொண்டிருந்தார். அது நடக்கவில்லை. மக்கள் ஆதரவு இடது சாரிகளுக்கு கிடைத்துள்ளது’’ என்று கூறியுள்ளார்.
கொலையானவர் வெற்றி
ஈக்குவடாரின் மேற்குப் பகுதியில் உள்ள பியூர்ட்டோ லோபஸ் என்ற நகரில் மேயர் வேட்பாளராக இருந்து மெனின்டஸ் இரு சக்கர வாகனத்தில் வந்த சில அடையாளம் தெரியாத நபர் களால் சுட்டுக் கொல்லப்பட்டார். வாக்குகள் எண்ணப் படுவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்தக்கொலை நடந்தது. வாக்கு எண்ணிக்கையில் 46 விழுக்காட்டி ற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்குப் பிறகு, அவரது உடல் உரிய மரியாதையுடன் புதைக்கப்பட்டது.
இதுதான் தொடக்கம்
அரசாங்கமே இல்லாததுதான் ஈக்குவடாரில் தற்போதுள்ள பிரச்சனை என்று இடதுசாரித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரபேல் கோரியா கருத்து தெரிவித்துள்ளார். தனது கட்சியான குடிமக்கள் புரட்சிகரக் கட்சியின் வெற்றி குறித்துப் பேசிய அவர், ‘‘இந்தத் தேர்தல் வெற்றி மிகவும் முக்கியமானது. அனைத்து எதிர்மறையான சூழல்களையும் மீறி நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனால், இதுதான் தொடக்கம். பொருளாதார வளர்ச்சி மற்றும் தேசப் பாதுகாப்பு ஆகியவை தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்க தற்போதுள்ள அரசை வெளியேற்ற வேண்டியிருக்கிறது’’ என்றார்.