what-they-told

img

உயிர் குடிக்கும் காற்று மாசு

உலகளவில் காற்றுமாசின் காரணமாக கடந்த 2017ம் ஆண்டு மட்டும் 49 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக ஒர் ஆய்வறிக்கை  கூறுகிறது. அசுத்தக் காற்று நம் ஆயுட்காலத்தை சராசரியாக ஓராண்டு எட்டு மாதங்கள் வரை குறைக்கும் என்று புதிய ஆய்வு ஒன்றில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுகாதார தாக்கங்களை ஆய்வு செய்யும் ஒரு நிறுவனம், செயற்கைக்கோள் கருவிகளைப் பயன்படுத்தி சுமார் 10 ஆயிரம் கண்காணிப்புக் கருவிகளை வைத்து காற்று மாசு குறித்த தரவுகளைச் சேகரித்து அவற்றை காற்று மாசினால் ஏற்பட்ட தாக்கங்களின் ஆதாரங்களோடு ஒப்பிட்டுள்ளது. இது 2017-ம் ஆண்டில் சுத்தமற்ற காற்றால் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதைக் கணக்கிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் உலகளவில் அதிக கேடுகளை விளைவிக்கும் நோய்கள் குறித்துப் பட்டியலிடப்பட்டது. அப்பட்டியலில் காற்று மாசு ஐந்தாவது இடத்தில் உள்ளது. உணவுமுறை, உயர் ரத்த அழுத்தம், புகை பிடித்தலால் வரும் நோய்கள் மற்றும் சர்க்கரை நோய் முதல் நான்கு இடங்களிலும் உடல் பருமன் ஆறாவது இடத்திலும் உள்ளன.

காற்று மாசினால் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்ததில் சுத்தமற்ற காற்றால் இதயநோய் சுவாசக் கோளாறுகள், நாள்பட்ட சுவாச நோய்கள் மற்றும் புற்று நோய் வரலாம் என்று கூறப்படுகிறது. உலகளவில் காற்று மாசினால் மனித ஆயுட்காலம் 20 மாதங்கள் குறைவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் தெற்காசியாவில் இது மிகவும் மோசமாக உள்ளது.
இதுபோன்ற பகுதிகளில் பிறக்கும் குழந்தைகள் காற்று மாசினால் தங்கள் வாழ்க்கையில் 30 மாதங்களை இழக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதனால் மட்டும் இங்கு ஆயுட்கால விகிதம் குறைகிறது என்று கூறிவிட முடியாது. தெற்காசிய நாடுகளில் இதனைக் கட்டுப்படுத்த போதிய சுகாதார அமைப்புகள் இல்லை என்பதும் ஒரு காரணம்.
சுத்தமற்ற காற்றை சுவாசிப்பது நீரழிவு நோயை உண்டாக்கும் மூன்றாவது பெரிய காரணியாக உள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் காற்று மாசுக்கும் நீரழிவு நோய்க்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

ஆனால் இது எப்படி நிகழ்கிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. எனினும் இதன் விளைவாக நுரையீரலில் வீக்கம் ஏற்படுவது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். அது உடலின் மற்ற அமைப்பு
களுக்குப் பரவக்கூடும். இன்சுலின் உற்பத்தியில் ஈடுபடும் செயல்கள் வீக்கமடைந்து உடலில் சர்க்கரையைக் கட்டுபடுத்தும் இன்சுலினை பாதிக்கும் என்று ஒரு கோட்பாடு முன்வைக்கப்படுகிறது.
வெளிப்புற காற்று மாசு தவிர வீட்டுக்குள் நிலவும் காற்று மாசும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வீட்டில் ஏற்படும் காற்று மாசுபாட்டால் 2017-ம் ஆண்டில் சுமார் 16 லட்சம் பேர் முன்கூட்டியே உயிரிழந்திருக்கிறார்கள். சமைக்க அல்லது குளிர்காலங்களில் தங்களை வெப்பமாக வைத்திருக்க திட எரிபொருட்களை எரிப்பதால் இது பொதுவாக நிகழ்கிறது. இந்தியாவில் 84.6 கோடி மக்களும் சீனாவில் 45.02 கோடி மக்களும் இந்தக் காற்றைச் சுவாசித்துள்ளனர்.

ஆனால் திட எரிபொருட்களில் மக்கள் சமைப்பதைக் குறைக்க இந்தியாவும் சீனாவும் பல நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன. அதேநேரம் ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் உணவைச் சமைக்க திட எரிபொருட்களையே இன்னும் பயன்படுத்துகின்றனர்.

சுத்தமற்ற காற்றால் பொதுவாக வயதானவர்கள்தான் அதிகம் உயிரிழக்கின்றனர். காற்று மாசுபாட்டால் ஏற்படும் தாக்கங்களில் குழந்தைகள் பாதிக்கப்படுவது குறித்து பல்வேறு ஊடகங்களும் கவனம் செலுத்துகின்றன. ஆனால் இதனால் உயிரிழக்கும் பத்தில் ஒன்பது பேர் 50 வயதைக் கடந்தவர்களாக இருக்கின்றனர்.

இது ஒப்பீட்டளவில் ஒரு புதிய விஷயம் ஆகும். 1990-ல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்தான் காற்று மாசினால் பெரிதும் பாதிக்கப்படும் நிலையில் இருந்தார்கள்.
அப்போது இருந்த பெரிய பிரச்சனை வீட்டில் ஏற்படும் காற்று மாசுதான். ஆனால் இந்த நிலை தற்போது மாறியுள்ளது. இன்னொரு நல்ல விஷயம் உலகளவில் காற்று மாசின் அபாயகரமான நிலையில் வாழும் மக்களின் எண்ணிக்கை 1990-ல் 96 சதவீதமாக இருந்தது. 2017-ல் அது 92 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் அமெரிக்காவில் காற்று மாசின் அளவு வெகுவாக குறைந்திருப்பதாகும். கடந்த நான்கு ஆண்டுகளில் சீனாவும் இதில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. எது எப்படியோ, காற்றுமாசைக் கட்டுப்படுத்த இன்னும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாகவேண்டும் என்பதைதான் ஆய்வறிக்கை வெளிப்படுத்துகிறது.

;