what-they-told

இந்நாள் பிப். 10 இதற்கு முன்னால்

1920 - போலந்து நாட்டிற்கும், பால்ட்டிக் கடலுக்கும் திருமணம் நடத்தப்பட்டது! போலந்தின் சில பகுதிகளை ரஷ்யாவும், ப்ரஷ்யாவும் கைப்பற்றிக்கொண்ட, இரண்டாம் போலந்துப் பிரிவினையின்போது, பால்ட்டிக் கடலையொட்டிய பகுதிகள் ப்ராஷ்யாவிடம் சென்றதால், போலந்துக்கும், அக்கடலுக்குமான தொடர்பே அற்றுப்போனது. போலந்தின் முதல் பிரிவினைக்குப்பின் உருவாகியிருந்த 1791இன் அரசமைப்புச் சட்டம், புதிதாக உருவாகிக் கொண்டிருந்த முதலாளித்துவ வர்க்கத்துக்கு ஆதரவாக இருந்ததால், பிரபுக்களுக்கு சம அதிகாரம் வழங்கிய, ‘பொன்னான விடுதலை’ என்றழைக்கப்பட்ட பழைய நடைமுறையை மீட்டுத்தருவார்கள் என்று, பிரபுகள் ரஷ்யாவுக்கு உதவியதாலேயே இப்பகுதிகளை இழக்க நேர்ந்தது என்பது தனிக்கதை. 1795இல் ஏற்பட்ட மூன்றாவது பிரிவினைக்குப்பின் போலந்து என்ற நாடே இல்லாமற்போன நிலையில், போலந்து மக்கள், நெப்போலியப் போர்கள் காலத்திலும், 1848இல் ஐரோப்பா முழுவதும் நடைபெற்ற புரட்சிகளின்போதும் போராடினாலும், ஆக்கிரமித்திருந்த நாடுகள் முதல் உலகப்போரில் தோற்றபின்னரே விடுதலையடைய முடிந்தது. போலந்து மக்கள் 1918-19இல் நடத்திய, பெரும் போலந்து எழுச்சியில் மீட்டெடுக்கப்பட்ட பகுதிகளை, இரண்டாம் போலந்துக் குடியரசாக உருவாக்க செர்செய்ல்ஸ் ஒப்பந்தம் வழிவகுத்தது. பொமரேலியா என்ற பெயரில் ஜெர்மன் மாநிலமாக இருந்த பொமரேனியா(இப்பகுதியைச் சேர்ந்த நாய்தான் பொமரேனியன் என்றழைக்கப்படுகிறது!) பகுதியை மீட்க, 1919 இறுதியில் படைகள் அனுப்பப்பட்டன. மீட்டுக்கொண்டே வந்த படைகள், 1920 ஃபிப்ரவரி 10இல் பால்ட்டிக் கடற்கரையை அடைந்தன. டான்சிக் நகர மக்கள் நிதி திரட்டி அளித்திருந்த இரண்டு ப்ளாட்டின மோதிரங்களில் ஒன்றை, கடலுக்கு அணிவிப்பது என்ற பொருளில், புட்ஸ்க் நகரில், தளபதி ஜோசஃப் ஹால்லர், கடலில் வீசினார். வெனிசின் கடற்பயண ஆளுகையைக் குறிக்க, ஏறத்தாழ கி.பி.1000லிருந்து நடத்தப்படும் கடலுடனான திருமணத்தை முன்மாதிரியாகக் கொண்டு இது நடத்தப்பட்டது. பால்ட்டிக் கடற்கரை போலந்துக் கடற்படையால் பாதுகாக்கப்படுகிறது என்பதற்கு அடையாளமாக, 21 பீரங்கிகள் முழங்க, போலந்துக் கடற்படைக் கொடி ஏற்றப்பட்டது. இத்திருமணத்தின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுத்தூண், இரண்டாம் உலகப்போரில் போலந்தை ஜெர்மெனி ஆக்கிரமித்தபோது அழிக்கப்பட்டது. போர் முடிந்தபின் 1945இல் பால்ட்டிக் கடலையெட்டிய பல இடங்களில் இத்திருமணம் மீண்டும் நடத்தப்பட்டது. 1920இல் நடத்தப்பட்ட திருமணத்தின் நூற்றாண்டு விழாவை இவ்வாண்டு ஃபிப்ரவரி 20இல் மிகப்பெரிய அளவில் நடத்த போலந்து தயாராகி வருகிறது.