what-they-told

img

கடவுள் அமைத்து வைத்த மேடைகள்!

கார்ப்பரேஷன் அலுவலக கேஷ் கவுண்டருக்கு வெளியில் ஏதோ நிழலாடுவது தெரிய வாட்ச்மேன் அந்தப்பக்கம் வந்தார். வலதுபுற அக்குளில் பெட்ஷீட்டை சுருட்டி வைத்துக்கொண்டு இடதுபுற கையில் சில தாள்கள் சொருகப்பட்ட துணிப்பையுடன் நின்றிருந்த நபரைப் பார்த்து “யாருங்க?’’ என்று கேட்டார். “அண்ணே. கல்யாணத்துக்கு கார்ப்பரேஷன் மண்டபம் புக் பண்ண வந்திருக்கேன்.’’ என்றார் அந்நபர். “நாளைக்கு காலைல 10.00 மணிக்குதானே கவுண்டர் திறப்பாங்க. நைட் பத்து மணிக்கே வந்துட்டீங்க?’’ “நாளைக்கு காலைல கூட்டமாயிடுமுன்னு இப்பவே வந்துட்டேனுங்க.’’ “அப்படியெல்லாம் ஒண்ணும் கூட்டம் அலைமோதிக்கிட்டு நிக்காது. போயிட்டு காலைல ஏழுமணிக்கு வாங்க போதும்.’’ “இல்லண்ணே. தப்பா நெனக்காதீங்க போனதடவையே இப்படித்தான் கொஞ்சம் சோம்பேறித்தனம் பட்டு மிஸ் ஆயிடுச்சி. நம்ம தாவூத் சாருக்குக்கூட தெரியும். அவருதான் கவுண்டருல முதல் ஆளா நில்லு, இந்தமுறை கண்டிப்பா எனக்கு புக் பண்ணி கொடுத்துடறேன்னு சொல்லியிருக்காரு’’ “தாவூத் சாரை ஏற்கெனவே பாத்துட்டீங்களா? உங்கபேரு...?’’ என்று கேட்டவாறு பாண்ட் பாக்கட்டிலிருந்த போனை எடுத்து அவருக்கு போன் போட்டார், “சார் நான் வாட்ச்மேன் வடிவேலு பேசறேன் மைக்கேல்னு ஒருத்தரு நீங்க சொன்னீங்கன்னு சமூகநலக்கூடம் புக் பண்றதுக்கு இப்பவே பெட்ஷீட் பையோட வந்திருக்காரு.’’ என்று கூற அதற்கு மறுமுனையிலிருந்து பேசிய கார்ப்பரேஷன் வருவாய் அதிகாரி தாவூத் கூறிய பதிலைக் கேட்டு “சரி சார்.’’ என்று போனை வைத்தார்.

“மைக்கேல், நீங்க நம்ம ஸ்டாஃப்பா? முதல்லயே சொல்லியிருக்கக்கூடாதா? சார்தான் சொன்னாரு. சரி வாங்க. நாளைக்கு நீங்கதான் கவுண்டர்ல முதல் ஆளு. இங்க படுத்தீங்கன்னா கொசுங்க உங்களை தூக்கிட்டு போயிடும். என் ரூம்ல படுத்துக்கங்க காலையில அஞ்சரை மணிக்கு எழுப்பி விட்டுடறேன்.’’ என்றார் வடிவேலு. “அதெல்லாம் வேணான்ணே. எனக்கு தூக்கமெல்லாம் வராது. நான் இங்கயே எங்கயாச்சும் ஒரு மூலையில உர்கார்ந்துக்கறேன். இல்லாட்டி உங்களுக்கு பேச்சுத்துணைக்கு ஆள் வேணுமின்னா கூட இருக்கேன்.’’ என்றார் மைக்கேல். அது வடிவேலுவுக்கும் உசிதமாகப்பட்டது.   “மைக்கேல் நீங்க எந்த பார்க்-ல வேலை செய்யறீங்க?’’ “ஜீவா பார்க் அண்ணே. தோட்டக்காரனா இருக்கேன்.’’ “தாவூத் சார் சொன்னாரு. நீங்க உங்க ரெண்டு பொண்ணுங்களையும் கஷ்டப்பட்டு படிக்க வச்சிருக்கீங்கன்னு. ஒரு பொண்ணு ஆடிட்டரு. இன்னொரு பொண்ணு வக்கீலாமே? எப்படி முடிஞ்சது உங்களால? மாமியார் வீட்டு சொத்து இல்ல உங்க வீட்டுல இருந்து ஏதாவது சப்போர்ட்?’’ “அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது அண்ணே. ரெண்டு பொண்ணுங்க, நோஞ்சான் பொண்டாட்டி, தோட்டக்காரன் வேலை. இதைத்தவிர எனக்கு எந்த சொத்தும் கிடையாது. ரெண்டு பொண்ணுங்களை பெத்துட்டமேன்னு ஆரம்பத்துல ரொம்ப கவலையா இருந்தது. அதனால அதுங்களை நல்லா படிக்க வச்சு ஒரு வேலைக்கு அனுப்பிட்டா அதுங்க எதுனா சம்பாதிச்சு பொழச்சுங்கங்கன்னு தோனுச்சு. பார்க்குல வாக்கிங் வர்றவங்க கிட்டே படிப்புக்கு உதவி கேட்டேன். செஞ்சாங்க. பசங்க நல்லா படிக்கறதை பாத்து பார்க்குல வாக்கிங் வந்த சில ஆசிரியர்கள் பார்க்குலயே டியூஷன் எடுத்தாங்க. இன்னும் சிலபேரு அதுங்க அடுத்தது என்ன படிக்கணும் ஐடியா மட்டும் சொல்லல, அதுக்கு உதவியும் பண்ணினாங்க. இப்ப நெனச்சு பாத்தா அவங்க ஒவ்வொருத்தரும் எனக்கு உதவறதுக்காக வாக்கிங் வந்த கடவுள்கள் மாதிரி தெரியறாங்க’’ என்றார் மைக்கேல்.  “ரெண்டு பொண்ணுல முதல் பொண்ணுக்கு கல்யாணம் பண்றதுக்கு கம்யூனிட்டி ஹால் புக் பண்ணி கடைசி நேரத்துல கேன்சலாயிடுச்சாமே தாவூத் சார் சொன்னாரு.’’ என்றார் வடிவேலு.

“ஆமாண்ணே இவ்வளவு உதவி பண்ணவங்களுக்கு நல்லா ஒரு வேளை சோறுபோட்டு நன்றிக்கடனை செலுத்தலாம்னு பார்த்தால் கடைசி நேரத்துல அமைச்சருக்கு வேண்டப்பட்டவங்க யாரோ கேட்டாங்கன்னு சி.எம்.மோட லட்டரை வச்சு, என்னுடைய புக்கிங்கை கேன்சல் பண்ணிட்டாங்கண்ணே. அதனாலதான் இப்பவும் திக்...திக்...னு இருக்கு.’’ என்றார் மைக்கேல். “மைக்கேல் உங்களை மாதிரி கஷ்டப்பட்டு வாழ்க்கையில முன்னுக்கு வந்தவங்களை பார்த்தாலே உடம்புக்குள்ளே ஒரு தெம்பு பரவுது. ஆறு மாசத்துக்கு முன்னாடியே புக் பண்ற இந்த கார்ப்பரேஷன் சமூக நலக் கூடம் நம்பளை மாதிரி ஏழை எளிய மக்கள் பயன்படறதுக்காகத்தான். அதுலயும் இந்த அரசியல்வாதிங்க உள்ளே புகுந்து சமூகநலக்கூடத்தை மட்டுமே நம்பியிருக்கிற ஏழை நடுத்தர வர்க்க மக்களின் உரிமைகளை பறிக்கற செயலைவிட கேவலமானது எதுவும் இருக்க முடியாது. காலையில கண்டிப்பா அதுக்கு ஒரு முடிவு கட்டுவோம்.’’ என்று சொல்லிவிட்டு எழுந்த வடிவேலு நெருப்புமூட்டி குளிர் காய்வதற்காக பழைய காகிதங்களை எடுத்துவரப் போனார்.  காலை 5.30 மணிக்கெல்லாம் ரெடியாகி கவுண்டரில் முதல் ஆளாக நின்றுகொண்டார் மைக்கேல். ஏழு மணிக்கு வரிசையில் பத்து பேர் நின்றார்கள். எட்டு மணிக்கு கவுன்சிலர், வட்டம், மாவட்டம் என்று அரசியல் கட்சிக்காரர்கள் வர ஆரம்பித்ததும் வாட்ச்மேன் வடிவேலுவுக்கு மெள்ள பயம் தொற்றிக்கொண்டது.

இந்த வரிசை நியாயப்படி போகாது என்று தெரிந்துவிட்டது அவருக்கு. அதனால் தன்னுடைய அறைக்குச் சென்று பழைய மாதக் காலண்டரின் பக்கங்களைக் கிழித்து அவற்றை சிறுசிறு டோக்கன் துண்டுகள் அளவுக்கு வெட்டி அதில் வரிசையாக எண்களை எழுதினார். அவற்றை வரிசையில் நின்றவர்களிடம் கொடுத்து, “எல்லோரும் இந்த டோக்கன் வரிசைப்படி வர வேண்டும். வேற யாரையும் நடுவுலு விட்டுடக்கூடாது.’’ என்றார். வரிசையில் இருந்தவர்கள் அந்த டோக்கன்களை ஆர்வத்துடன் வாங்கிக் கொண்டார்கள். வடிவேலு, தாவூத் சாருக்கு போன் போட்டான். அவர்தான் சமூகநலக் கூடத்தை ஒதுக்கீடு செய்யும் பொறுப்பில் உள்ளவர். “சார் லோக்கல் எம்.எல்.ஏ., மினிஸ்டரோட ஆளுங்கன்னு கவுண்டர்ல வந்து கேட்டுட்டு போய்கிட்டிருக்காங்க. மைக்கேலைப் பார்த்தால் பாவமா இருக்கு சார். ஏதாவது உதவி பண்ணுங்க சார்.’’ என்றார். மறுமுனையிலிருந்து வந்த வார்த்தைகள் வடிவேலுவுக்கு நம்பிக்கையளிப்பதாக இல்லை. “ஆமாம் வடிவேலு எனுக்கும் போன்கள் வந்துகிட்டிருக்கு. பார்ப்போம்.’’ என்றார் தாவூத்.  காலை 10.00 மணிக்கு அந்த கார்ப்பரேஷன் கவுண்டர் பரபரப்பாகி விட்டது. ஆளுங்கட்சி பிரமுகர்கள் நாலுபேர் கவுண்டரில் உட்கார்ந்திருந்த நபரை மிரட்ட ஆரம்பித்தார்கள். கவுண்டரில் உட்கார்ந்திருந்த ஊழியர், “சார் டோக்கன் பிரகாரம்தான் அப்ளிகேஷன் வாங்கணும்னு எனக்கு இன்ஸ்டிரக்சன். நீங்க வேணா உள்ளே அதிகாரியைப் போய் பாருங்க.’’ முதல் டோக்கன் வாங்கிய மைக்கேலின் அப்ளிகேஷன் தாவூத் சாரின் கையில் இருந்தது. அவரது டேபிளின் எதிரில் நான்கு பேர் வெள்ளையும் சொள்ளையுமாக உட்கார்ந்து கொண்டு பவ்யமாக பேசிக் கொண்டிருந்தனர். மைக்கேல் அந்த அறையின் ஜன்னல் ஓரத்தில் நின்று அவர்கள் பேசுவதைக் கேட்டான். “சார் நம்ம எம்.எல்.ஏ.சாரோட சொந்தக்காருங்க. அந்த மண்டபத்துலதான் கல்யாணம் பண்ணனும்னு அடம் பிடிக்கிறாங்க. லோக்கல்லயே இருந்துகிட்டு நாங்க இந்த உதவிகூட பண்ணலேன்னா எங்களுக்கு அசிங்கமாயிடும்.’’ என்றார் வெள்ளை வேட்டியணிந்திருந்த நபர்.  “சாருக்கு டவுட்டா இருந்தா நாங்க எம்.எல்.ஏ. அண்ணனையே வரச்சொல்றோம்.’’ என்றார் இன்னொருவர். “சார் நீங்க சொன்னாவே போதும்சார். எம்.எல்.ஏ. சாரெல்லாம் எதுக்கு. ஆனா உங்களை மாதிரியே எனக்கு ஒரு சிக்கல் இருக்கு. இதப்பாருங்க ஒருத்தருக்கு அமைச்சர் சிபாரிசு கடிதம் கொடுத்திருக்காரு. இன்னொருத்தருக்கு சி.எம். கடிதம் கொடுத்திருக்காரு. நான் என்ன பண்றது. என் நிலைமையில நீங்க இருந்தா நீங்க என்ன பண்ணுவீங்க? சொல்லுங்க சார்.’’ என்றார் தாவூத். “என்னது சி.எம். சிபாரிசு கடிதம் கொடுத்திருக்காரா.

ஆச்சர்யமா இருக்கே’’ என்று சொன்னவர்களிடம் அந்தக்கடிதத்தை பைலோடு எடுத்து காட்டினார் தாவூத். அதைப்பார்த்த நால்வரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.  பின்னர் அவர்களே, “சரி பிரதர். நாங்க அண்ணன்கிட்டே இது சம்பந்தமா பேசிட்டு, அண்ணன் என்ன சொல்றாருன்னு கேட்டுட்டு வர்றோம்.’’ என்று இடத்தை காலி செய்தனர். அவர்கள் நகர்ந்ததும் ஆகஸ்ட் 23, 2020ஆம் தேதிக்கு சமூகநலக்கூடத்தை புக் செய்து அதற்கான ரசீதை மைக்கேலிடம் கூப்பிட்டுக் கொடுத்தார் தாவூத். மைக்கேலுக்கு ஒன்றும் புரியவில்லை, “சார் அந்த சி.எம். லெட்டர்?’’ என்று கேட்டார். “அதுவா போனவருஷம் உங்களோட பெரிய பொண்ணுக்கு நீங்க புக் பண்ண மண்டபம் கேன்சல் ஆக காரணமாயிருந்ததே அந்த லட்டர்தான் இது. அவங்க அரசியல் பண்ணாங்கன்னா நமக்கு அரசியல் பண்ணத் தெரியாதா என்ன?’’ என்றார் தாவூத். “சார் அவங்களும் போய் சி.எம்.கிட்டே லெட்டர் வாங்கிட்டு வந்துட்டாங்கன்னா?’’ “அதுக்கு வாய்ப்புகள் ரொம்ப குறைவுதான். அப்படி வாங்கிட்டு வந்தாலும் கவலையில்லை. என் கிட்டே அதைவிட வெயிட்டா கவர்னர் லெட்டரே இருக்கு.’’ என்றார் தாவூத் தெம்பாக. மண்டப ரசீதோடு வெளியே வந்த மைக்கேலுக்கு கை கொடுத்தார் வடிவேலு.  “அண்ணே நீங்க இன்னும் டூட்டி முடிஞ்சு போகலியா?’’ என்றார் மைக்கேல். “இதுக்காகத்தான் வெயிட்டிங். இப்பதான் மகிழ்ச்சியா இருக்கு. நேத்திக்கு நைட் நாம என்னன்வோ பேசினோம். ஆனா, ஒரு விஷயம் கேக்க மறந்துட்டேன் மைக்கேல், உங்க பொண்ணு அட்வகேட்டுக்கு படிச்சிருக்குன்னு சொன்னீங்க. கட்டிக்கப் போற மாப்பிள்ளை என்ன பண்றார்னு கேக்க மறந்துட்டேன்.’’ “மாப்பிள்ளையா? இப்பத்தான் மண்டபமே முடிவாகி இருக்கு. இனிமேதான் மாப்பிள்ளை பாக்கணும்.’’ என்றார் மைக்கேல். “யோவ் என்னய்யா சொல்றே?’’ என்று மிரட்சியோடு கேட்டார் வடிவேலு. “ஆமாண்ணே இப்பல்லாம் மாப்பிள்ளை கிடைக்கறது ஈஸி. மண்டபம் கிடைக்கறதுதான் கஷ்டம். கடவுள் அமைத்து வைத்த மேடைன்னு கண்ணதாசன் பாடினாரே அது கல்யாணத்தை மண்டபத்தைப் பத்திதான்னு இப்பத்தான் புரியுது’’ என்ற மைக்கேல் டாட்டா சொல்லிவிட்டு விடைபெற ‘நாட்டு நடப்பு எப்படியெல்லாம் போய்க்கிட்டிருக்கு பாரு’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டான் வடிவேலு.