பொங்கல் பண்டிகையைக் கொண்டாட தயாரிப்புகள் ஒருபக்கம் ...... நாட்டுப்புறக் கலைஞர்களை கவுரவிப்ப தற்கான ஏற்பாடுகள் மறுபக்கம் .... ஆண்டுதோறும் இந்தக் கலைஞர்களின் கூடுகைக்கு இடமளிக்கிறது சென்னை லயோலா கல்லூரி . இங்கு பணிபுரியும் பேராசிரி யர் இரா.காளீஸ்வரன் தமிழகம் முழுவதும் உள்ள பலவகைக் கலைஞர்களை, கலைகளை ஒரே இடத்தில் சங்கமிக்கச் செய்கிறார். நாட்டுப்புற கலைகள் மட்டுமல்ல கலைஞர்களும் நலிவுற்றிருக்கிறார்கள். இவர்க ளின் வாழ்வில் நம்பிக்கை ஒளியூட்டுவதாக உதவித்தொகை வழங்குவதும் கல்விக்கு உதவி செய்வதும் அமைந்தன. இவற்றோடு வீதி விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளுக்கு விதவிதமாக பெயர் வைக்கப்படுகிறது. நாட்டுப்புற கலைஞர்களுக்கு வீதிவிருதுகள் எனப் பெயர்வைக்க என்ன காரணம்? பேராசிரி யர் காளீஸ்வரன் அவர்களிடமே கேட்டோம். தெருக்கூத்து, கட்டைக்கூத்து, கரகாட்டம், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் இன்னும் பலப்பல... எல்லா நாட்டார் கலைகளும் வீதிக ளில், தெருக்களில்தான் நிகழ்த்தப்படுகின்றன. கோயில் விழாக்கள் என்றாலும் இந்த நிகழ்த்துக்கலைகள் நிகழ்கின்ற இடம் வீதிதான். கலைகள் மட்டுமல்ல நாட்டுப்புறப் பாடல்களும் கூட வயல்வெளிகளிலும் களத்து மேடுகளிலும்தான் பாடப்படுகின்றன. இப்படி ஆட்டம் பாட்டம் எது என்றாலும் அவற்றின் பிறப்பிடமும் நிகழ்விடமும் வீதி என்பதால் அந்தப் பெயரிலேயே அவர்களுக்கு விருது வழங்கலாம் என்று தோன்றியது. அப்படி உருவானதுதான் வீதி விருது.
வீதி விருது வழங்கும் முதல் நிகழ்வு எங்கே நடந்தது? லயோலாவில்தானா?
நாட்டுப்புறக் கலைஞர்களின் ஒன்றுகூடல் காலத்தின் தேவை என்ற எண்ணம் ஏற்பட்டது. இந்த நிகழ்வை எங்கே நடத்துவது என்ற கேள்வியும் எழுந்தது. அப்போது எங்கள் நினைவுக்கு வந்தது அம்மா திருமண மண்டபம். சைதை துரைசாமி அவர்கள் இந்த மண்டபத்தை வேளச்சேரியில் (இப்போது பிரபலமாக உள்ள பீனிக்ஸ் மால் அருகே) கட்டியுள்ளார்.அங்கே இடம் தந்தார். அங்கு நடைபெற்ற முதல் நிகழ்வுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து 700 கலைஞர்கள் வந்திருந்தார்கள். இதனால் ஊக்கம் பெற்ற நாங்கள் தேவை உணர்வின் தூண்டுதலால் ஆண்டு தோறும் நடத்த வேண்டும் என்று தீர்மானித் தோம். எங்கள் கனவு நனவாக, எண்ணம் ஈடேற லயோலா கல்லூரியின் அதிபர் பிரான்சிஸ் ஜெயபதி அவர்களும் கலை மற்றும் இலக்கியப் பிரிவின் இயக்குனர் ஜேக்கப் அவர்களும் பேருதவி புரிந்தனர். இவர்களே விழாவின் நீட்சிக்கும் மாட்சிக்கும் உறுதுணை. நாட்டுப்புறக் கலைஞர்கள் நிமிர்வதற்கு முதுகெலும்புகள் ஆனார்கள். எங்களுக்கும் தெம்பு ஏற்பட்டது. இப்படித்தான் வீதி விருது விழாவின் நிகழ்களம் லயோலா கல்லூரி வளாகத்திற்கு மாறியது. இரண்டாம் ஆண்டு தொடங்கி இப்போது நடந்த ஏழாம் ஆண்டு வீதி விருது விழா வரை லயோலாவிலேயே நடந்துள்ளது. கள விரிவின் காரணமாக கலைஞர்களின் பங்கேற்பும் விரிவடைந்து வருகிறது. 700 கலைஞர்களுடன் முதல் விழா தொடங்கியது என்று முன்பே கூறினேன். ஏழாவது ஆண்டில் இந்த எண்ணிக்கை 7,700 ஆகியிருக்கிறது. நாட்டுப்புறக் கலைஞர்கள் ஒருங்கிணைப்பு என்ற முயற்சியின் முன்னெடுப்புகளில் கணி சமான தூரத்தைக் கடந்திருப்பதாக நினைக்கி றேன். இன்னும் பயணிக்க வேண்டியுள்ளது.
வீதி விருது விழாவைப் போலவே வித்தியாச மாக ‘மக்கள் வீதி’ என்ற மாத இதழையும் நடத்தி வருகிறீர்கள். இதன் தொடக்கம் எப்படி வந்தது?
மக்கள் வீதி இதழ் நாட்டுப்புறக் கலை ஞர்களை ஒருங்கிணைப்பதற்கான தொடக்கப் புள்ளி. முதலில் இதனை டேபுலாய்ட் வடிவில் நான்கு பக்க இதழாகக் கொண்டு வந்தோம். கலைஞர்களுக்கான நலத்திட்டங்களின் விவரம்; குழுக்களின் அறிமுகம் என்றுதான் தொடங்கினோம். இதற்கு உதவியாக இருந்த இப்போதும் இருக்கிற ‘மாற்று ஊடக மைய’ த்தை அறக்கட்டளையாகப் பதிவு செய்தோம். தேர்தல் பிரச்சார காலத்தில் சைதை துரைசாமி அவர்கள் அளித்த தொகை அறக்கட்டளையின் ஆரம்ப வைப்புத் தொகையாகப் பயன்பட்டது. நானறிந்தவரை கடந்த 10 ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிற மக்கள் வீதி, நாட்டுப்புற கலைஞர்களுக்கான ஒரே இதழ் எனலாம். நாட்டுப்புற கலைஞர்களுக்கான தனித்துவ இதழாக, பன்முகத் தன்மை கொண்டதாக, அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இந்த இதழ் வந்துகொண்டிருக்கிறது.
வீதி விருது விழா, மக்கள்வீதி இதழ், மாற்று ஊடக மையம் ஆகியவற்றின் செயல்பாட்டுப் பயனை என்னவாக நினைக்கிறீர்கள்?
வீதி விருது விழாக்களின் தாக்கத்தால் லயோலா கல்லூரியில் பண்பாடு மக்கள் தொடர்பகம் உருவாக்கப்பட்டது. இது நாட்டுப்புறக் கலைகளின் பயிற்சி அமைப்பாக உள்ளது. இந்தப் பயிற்சிகளுக்கு 200க்கும் அதிகமான கலைக் குழுக்களைப் பயன்படுத்தி இருக்கிறோம். மக்கள் வீதி இதழில் வெளிவரும் காத்திர மான கட்டுரைகள் நூல்கள் ஆக்கப்பட்டு வீதி விருது விழாவில் வெளியிடுகிறோம். இது ஆவணப்படுத்தலுக்கும் கருத்துப் பரவலுக்கும் உதவுகிறது. நாட்டுப்புற கலைஞர்களுக்குத் தன்னை அறிதல் என்பதோடு சமூகத்தை அறிதல் என்பதற்கும் இந்த இதழ் உதவுகிறது. மாற்று ஊடக மையம் என்ற பெயரே வித்தியாசமானது. ஊடகம் என்றால் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், கணினி- செல்பேசி மூலமான சமூக ஊடகங்கள் என்றுதான் சொல்லப்படுகிறது. ஆனால் சமூகத் திற்குத் தேவையான சமூக மாற்றத்திற்குத் தேவையான செயல்களைக் கூறுவதற்கு நாட்டுப்புறக் கலைகளையும் பயன்படுத்த முடியும் என்பதால் மாற்று ஊடகம் எனப் பெயரிட்டோம். இந்த அமைப்பின் மூலம் நாட்டுப்புற கலைஞர்களையும் கலைகளையும் புராண, இதிகாசக் கதைகளிலிருந்து மடைமாற்றி சமூக அக்கறையுடன் கருத்து சொல்லலுக்குக் கொண்டு வந்துள்ளோம். அது மட்டுமல்ல அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் முக்கியத்துவத்தை கலைவடிவங்கள் மூலம் அறிவியல் இயக்கத் தோடு இணைந்து கொண்டுசென்றோம்.
வெறும் பிரச்சாரம் என்ற வரம்புக்குள் நில்லாமல் பள்ளிப் படிப்பை இடையில் கைவிட்ட மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களைப் பள்ளியில் சேர்க்க உதவி செய்தோம். மாவட்டந்தோறும் சராசரியாக 5 ஆயிரம் மாணவர்களைக் கலை நிகழ்ச்சிகள் மூலம் சேர்க்க முடியும் என்பதை சாதித்து காட்டினோம். தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றியும் பெண்களுக்குப் பெரும் பிரச்சனையாக- வெளியே சொல்லத் தயங்குகிற - அறியாமை யால் அலட்சியமாக விட்டு மரணத்தின் பிடிக்குள் செல்கிற மார்பகப் புற்றுநோய், கர்ப்பவாய் புற்றுநோய் போன்றவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவியிருக்கி றோம். நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நலவாரியம் அமைக்கக் கோரிய தமுஎகச பேரணியில் மாற்று ஊடக மையத்தையும் இணைத்து கோரிக்கை வெற்றி பெற துணை நின்றோம். தமுஎகசவுடன் இணைந்து நடத்திய இயக்கங்களால் நாட்டுப்புற கலை ஞர்களுக்கான மாநில அரசின் உதவித்தொகை 1,500 ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் பாடல் மற்றும் நாடக பிரிவு ( சாங் & ட்ராமா பிரிவு ) கலைக்குழுக்களுக்கான தொகையை 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 11 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளது . கலை ரீதியாக மாற்றம் செய்வதோடு பொருளாதார ரீதியாகவும் கலைஞர்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறோம் . இன்னும் சொல்வதற்கும் கேட்பதற்கும் ஏராளமான விஷயங்கள் பேராசிரியர் காளீஸ்வரனிடம் இருந்தாலும் நேரமும் இடமும் கருதி உரையாடலை நிறைவு செய்து வெற்றிகள் தொடர வாழ்த்தி விடைபெற்றோம்.
சந்திப்பு: மயிலை பாலு