இன்று அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆன்லைன் போராட்டம்
சென்னை, ஜூலை 22- கொரோனா என்ற கொடிய வைரஸ் நோயால் கடந்த நான்கு மாத காலமாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு அமுலில் உள்ள கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் இந்தியா முழுவதும் 12 கோடிக்கு மேற்பட்டவர்கள் வேலை இழந்துள்ளனர். அனைத்து பகுதி மக்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் அறிவித்த இலவச பொருட்கள் கூட அனைவரையும் சென்றடையவில்லை. ரேஷன் கார்டு ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்ட போது ஏற்பட்ட பல குளறுபடிகளால் ஏராளமானவர்கள் ரேஷன் கார்டுகளை இழந்து ரேஷன் பொருட்களை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். புதிதாக ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவதிலும் தாமதம் ஏற்படுகிறது.
புலம்பெயர் தொழிலாளர்கள் எந்த ஆதாரமும் அற்றவர்களாக ரேஷன் பொருட்களை பெற முடியாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் மத்திய மாநில அரசுகள் மக்களை பாதுகாப்பதற்கு பல நடவடிக்கைகள் எடுப்பதாக விளம்பரங்களை மட்டுமே செய்து வருகிறது. அரசுகளின் ஆடம்பரமான அறிவிப்புகள் மக்களை பாதுகாக்க உதவாது. மத்திய உணவுக் கிடங்குகளில் தேங்கி மக்கி, எலியும், பூச்சிகளும் சாப்பிட்டு வீணாகும் உணவுப் பொருட்களை மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்தால் பசியின் கொடுமையில் இருந்தும் பட்டினி சாவு களிலிருந்தும் ஏழை எளிய மக்களை ஓரளவு பாதுகாக்க முடியும்.
இலவசமாக ரேஷனில் அறிவித்த உணவுப் பொருட்களும் ஜூலை மாதம் வரை மட்டும்தான் என தமிழக அரசு அறிவித்திருப்பது பொருத்தமற்றது. எனவே கொரானா பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டுவரும் வரை பாதுகாப்பது அரசின் கடமை. எனவே, ரேஷன் கடைகளில் தரமான சுத்தமான பொருட்களை வழங்கிடு; அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் டிசம்பர் வரை ரேஷன் கடைகளில் விலையில்லாமல் வழங்கிடு; டிசம்பர் மாதம் வரை இலவச அத்தியாவசிய பொருட்களுடன் மாதம் ரூ.1000 வழங்கிடு; ரேஷன் கார்டு இல்லாத அனைவருக்கும் போர்க்கால அடிப்படையில் தற்காலிக ரேஷன் கார்டுகள் வழங்கிடு; கொடுக்கும் இலவச பொருட்களுடன் ஊட்டச்சத்தான தானியங்கள், வீட்டுக்கு தேவையான 16 வகை அத்தியாவசிய பொருட்களை கொடு; சத்துணவு திட்டத்தின் கீழ் வரும் பள்ளிக் குழந்தைகளின் மதிய உணவு பொருட்களை வீட்டில் வழங்க உறுதிசெய்ய வேண்டும், இந்திய உணவுக்கிடங்கில் 10.4கோடி டன் உணவுப்பொருள்கள் இருப்பில் இருக்கிறன. இது வரை இவ்வளவு உணவுப்பொருட்கள் நம் உணவுக்கிடங்கில் இருந்ததில்லை. இது தேவையை விட 8 கோடி டன் அதிகமானது. இதை வைத்து அனைவருக்கும் கொரோனா காலத்தில் இலவசமாக உணவுப்பொருட்கள் வழங்க வழிவகுக்க வேண்டும் - போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் இன்று(23.07.20) ஆன்லைன் போராட்டத்தை அனைத்து பெண்கள் கூட்டமைப்பு நடத்துகிறது.