1948 - இனப்படுகொலைக் குற்றத்தைத் தடுத்தல், அதற்கான தண்டனைகள் ஆகியவற்றுக்கான உடன்படிக்கை ஐக்கிய நாடுகள் அவையால் நிறைவேற்றப்பட்டது. இதற்கான வரைவை உருவாக்கி, இதனை நிறைவேற்றப் பெருமுயற்சி மேற்கொண்ட ரஃபேல் லெம்கின் என்பவர்தான், இனப்படுகொலையைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான ஜினோசைட் என்பதை உருவாக்கினார். அதற்கு முன்பு, இன, மதக் குழுக்களை அழிக்கும் நோக்கில் செய்யப்பட்ட கொலைகள் படுகொலைகள், அழித்தொழிப்பு, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்ற பெயர்களாலேயே குறிப்பிடப்பட்டன. இரண்டாம் உலகப்போரின்போது 1941இல் சோவியத்தை ஜெர்மெனி ஆக்கிரமிக்க முயன்றபோது கைது செய்யப்பட்ட சுமார் 50 லட்சம் செஞ்சேனை வீரர்கள் திரும்பியே வராத (படுகொலை செய்யப்பட்ட) நிகழ்வை, பெயரிடப்பட்டாத ஒரு குற்றம் என்றே சர்ச்சில் குறிப்பிட்டார். ஐரோப்பா முழுவதும் நாஜிகள் நிகழ்த்திய படுகொலைகள் உள்ளிட்டவற்றை விவரித்து 1944இல் வெளியான, ‘ஆக்கிரமிக்கப்பட்ட ஐரோப்பாவில் அச்சு நாடுகளின் ஆட்சி’ என்ற நூலை எழுதிய லெம்கின்தான், அதில் ஜினோசைட் என்ற சொல்லை முதன்முறையாகப் பயன்படுத்தியிருந்தார். இனம், குடும்பம் ஆகிய பொருள்களைக்கொண்ட கிரேக்கச் சொல்லான ஜீனோ, கொலை செய்தல் என்ற பொருள்கொண்ட சேய்டியர் என்ற லத்தீன் சொல் ஆகியவற்றை இணைத்து, ஜினோசைட் என்ற சொல்லை அவர் உருவாக்கினார். போர்க்காலத்தில் நாஜிகள் செய்த குற்றங்களை விசாரித்த நூரம்பர்க் விசாரணைகளிலேயே இச்சொல் பயன்படுத்தப்பட்டதுடன், மற்றவர்களும் உடனடியாக இச்சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கினர். போலந்து-யூத பின்னணிகொண்ட லெம்கினின் குடும்பத்தில் மட்டும் 49 பேர் நாஜிகளால் கொல்லப்பட்டிருந்தனர். வார்சாவில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றிய லெம்கின், போரின்போது அமெரிக்காவுக்கு வந்து, நூரம்பர்க் விசாரணையில் தலைமை வழக்கறிஞராகச் செயல்பட்ட ராபர்ட் ஜேக்சனுக்கு ஆலோசகரானார். இனப்படுகொலைத் தடுப்பு உடன்படிக்கையின் வரைவைப் பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பி ஆதரவு கோரிய லெம்கின், அமெரிக்காவின் ஆதரவுடன் ஐநாவிலும் முன்மொழிந்து, அதற்கென நடத்தப்பட்ட மாநாட்டில் நிறைவேற்றச் செய்தார். ஓர் இனம் அல்லது குழுவினரைக் கொலை செய்தல், அவர்களுக்கு உடலாலோ, மனத்தாலோ தீங்கிழைத்தல், அவர்களின் வாழ்க்கையை அழிக்கும் சூழ்நிலைகளை உருவாக்குதல், இனப்படுகொலைக்கு உடந்தையாக இருத்தல் உள்ளிட்டவற்றைக் குற்றமாக வரையறுக்கும் இந்த ஒப்பந்தத்தில் இதுவரை 137 நாடுகள் கையெழுத்திட்டிருந்தாலும், தங்கள் ஒப்புதலின்றி இக்குற்றத்தை சாட்ட முடியாது என்ற கட்டுப்பாட்டுடன்தான் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.