திண்டுக்கல் பேகம்பூரில் அராஜகம்
திண்டுக்கல், ஏப்.17- மகப்பேறுக்கு வந்த இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த 4 கர்ப்பிணிப் பெண்களை கொரோனா பிரிவில் அனுமதித்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராக கண்டனம் எழுந்துள்ளது. திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த நூருல் அம்மு கஷா,அனிஸ், ஷாகிரா, தாகிரா ஆகிய நான்கு கர்ப்பிணிப்பெண்கள் தனியார் மருத்துவமனைகளில் கடந்த ஒன்பது மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தனர்.
பேகம்பூர் பகுதியில் கொ ரோனா தொற்று அதிகம் உள்ள காரணத்தால் தொடக்கத்திலேயே இந்த ஊரில் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் பராமரித்து வந்தனர் . இதனால் இப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஊரில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டது. ஸ்கேன் மையங்களிலும் இஸ்லாமிய பெண்கள் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதனை அடுத்து நிறைமாத கர்ப்பிணிகளான மேற்கண்ட 4 பேரும் புதனன்று திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மருத்துவமனை நிர்வாகம் நான்கு கர்ப்பிணிப் பெண்களையும் கொரோனா சிகிச்சை பிரிவில் சேர்த்தது. இந்த சம்பவத்தை அறிந்து இஸ்லாமிய அமைப்புகள் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து மருத்துவத் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் அளித்தனர். இதனையடுத்து சாகிரா என்ற பெண்ணைத் தவிர மற்ற மூன்று கர்ப்பிணிப் பெண்களும் மகப்பேறு பிரிவுக்கு மாற்றப்பட்டனர். 3 பேருக்கும் வியாழனன்று குழந்தைகள் பிறந்தன. சாகிராவுக்கு அடுத்த மாதம் பிரசவம் என்பதால் அவரை மீட்டு வேறொரு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.